தமிழ்நாட்டில் பிறந்து ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களை பொய் வழக்கில் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே ஐயா ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்தது, நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு நீதிமன்றத்தில் காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்தது பாஜக அரசு.
தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் அவருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டவை என்பது ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்தின் மூலம் அவர் மீதான கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியானது. .ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற சனநாயகம் காக்க தங்கள் இன்னுயிரை பறிகொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் வரிசையில் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களும் இணைந்த நாள் இன்று.
வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் ஈகம் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்!
ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



