உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
இன்று மாவீரர் நாள்..!
மங்காப் புகழ் கொண்ட தமிழர் என்ற தேசிய இனத்தின் தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக தாய் மண்ணில் விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள்.
தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவில் நிறுத்தி போற்றுகின்ற புனித நாள்.
தாயக விடுதலை என்கின்ற உச்ச இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமாக மாறிப்போன மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள்.
அடிமை காரிருளை நீக்க, தங்களையே எரித்து விடுதலை வெளிச்சம் தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, காந்தள் மலரும் இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் நிறுத்தி இனத்தின் விடுதலை என்கின்ற இலக்கிற்கு வழிகாட்டுகிற ஒளிவிளக்குகளாக நினைத்து போற்றி வணங்குகிற பொன்னாள்.
இந்த நாள் விடுதலை என்கின்ற மகத்தான கனவிற்காக இன்னுயிரை ஈந்தவர்களை நினைத்து அழுது, புலம்பும் நாள் அல்ல; மாறாக எந்த புனித கனவிற்காக, எந்த தமிழீழ நாட்டை அமைப்பதற்காக, நம் மாவீரர்கள் தங்கள் உயிரை ஈந்தார்களோ, அந்த புனிதக் கனவை நம் நெஞ்சத்தில் நிறைத்து வீழ்வதெல்லாம் எழுவதற்கே என நமக்கு நாமே உறுதி ஏற்றுக் கொண்டு மண்ணின் விடுதலைக்காக களமாடிட பற்றுறுதி கொள்கின்ற வரலாற்று நாள்.
நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என்றார் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு இறையாண்மை தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும் என அரசியல் அறிவியல் கூறுகிறது . அத்தகைய வரலாற்று புகழ்வாய்ந்த ஒரு தேசிய இனத்திற்காக, மண் விடுதலை எனும் இலட்சிய இலக்கினை அடைய, தலைவர் வழி நின்று தன்னிகரற்ற போர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் இதுவரை உலகம் கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள்.
தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதி எதிர்ப்புக்கு என்று இயக்கம் கட்டியவர்கள் இருந்த தாயகத் தமிழகத்தில் கூட சாதிக்க முடியாத சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு இணைந்து , பெண் விடுதலை, பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதை கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.
தமிழ்ப் பேரினம் மட்டுமல்ல, உலக மானுட இனத்தில் இப்படிப்பட்டவர்கள் எப்படி தோன்றினார்கள் என்று உலகம் வியக்கும் அளவிற்கு பெரும் வீரர்களை தமிழ் மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகள் அமைப்பு பெற்றிருந்தது. அத்தகைய வீரமும், அறிவும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிகு மறவர் கூட்டம் கொண்ட மனித ஆற்றலை, அறிவுத்திறனை இந்த இனம் இழந்துதான் நிகழ்ந்ததிலேயே ஆகப்பெரும் இழப்பு என்கிற வலி எப்போதும் எனக்குள் இருக்கிறது.
ஆயுதங்களை கைவிடுங்கள், நாங்கள் சமாதானம் தருகிறோம் என்று உலகத்தார் தந்த உறுதிமொழிகளை போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழர்களின் துயரங்களுக்கு ஒரு அரசியல் தீர்வை உலக சமூகம் வழங்கவில்லை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. 2009இல் சிங்கள பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை போரின் போது காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணை என்ற பெயரில் கடத்தப்பட்டோரெலாம் என்ன ஆனார்களோ என எம்மினத் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இதுகுறித்து ஆட்சி மாறினாலும் அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி மாறினாலும் சிங்கள ஆட்சியாளர்கள்
எவ்வித பதிலையும் அளிப்பதில்லை.
சமீபத்தில் கூட புதிதாகக் கண்டறியப்பட்ட , இன்னும் புதிது புதிதாக கண்டறியப்பட்டு கொண்டே இருக்கின்ற ,செம்மணி உள்ளிட்ட தமிழர்களை அநியாயமாக கொன்று புதைத்த மனித புதைகுழிகள் தமிழ் இனப்படுகொலைக்கு மிகப்பெரிய ஆதாரமாக வலுசேர்க்கின்றன. ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுத்த உலக நாடுகளும் ஐ.நா. மன்றமும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
ஒவ்வொரு ஐநா மன்ற அமர்வின் போதும் இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத்தையே பதிலாக தருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிகப்பெரிய துரோகமாகும். இன்றளவும் தொடர்ச்சியாக தமிழர்ப்பகுதிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை திணித்து, தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ தாயகத்தில் முற்று முழுதாக ஒழிக்க முயல்கின்றார்கள்.
(1/2)






