கூடலூர் பகுதியில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும் தொடர் உயிரிழப்புகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

1

நீலகிரி கூடலூர் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களை வஞ்சிக்கும் வனவிலங்கு அச்சுறுத்தல் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

கூடலூர் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதல்கள், அதனால் ஏற்படும் படுகொலைகள் என்பது மக்களின் உயிராதார வாழ்வியல் சூழலை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதும், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதும் இந்த தொடர் உயிரிழப்புகள் தொடர்பாக எந்த நிரந்தர தீர்வையும் வனத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்களால் ஏற்படுத்த முடியவில்லை என்பது மேற்கண்ட தாக்குதல்கள் அலட்சிய போக்கின் விளைவாக உருவாக்கப்பட்ட திட்டமிட்ட படுகொலைகள் என்பதும் உறுதியாகிறது. கடந்த 30.09.2025 அன்று மட்டும் ஒரே நாளில் மசினக்குடியை சேர்ந்த புட்டுநாதன் மற்றும் நெலாக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் காட்டு யானைகளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த பெருந்துயர நிகழ்வு மூலம் வனத்துறையின் அலட்சியப்போக்கும், மாவட்ட நிர்வாகத்தினால் மக்கள் பாதுகாப்பு புறந்தள்ளப்படுவதும் உறுதியாகிறது.

விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வரும் கூடலூர் மக்களை அந்த விவசாய நிலங்களில் யானைகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதும், குடியிருப்புகளை உடைப்பதும் வாகனங்கள் போன்ற உடமைகளை சேதப்படுத்துவதும் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கி கொன்று வருகிறது. புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கால்நடைகளை அடித்து கொன்று வருவதும் அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வனவளத்தின் தேவையும் வனவிலங்குகளின்
பங்களிப்பும் மிக முக்கியம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், வனவளத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்படும் பல்லாயிரம் கோடிகள் அடர்வன பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறதா என்றால் இல்லை. அப்படி அடர் வன நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்டிருக்குமானால் மக்களின் வசிப்பிடங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து மக்களை தாக்கி கொல்லும் நிலை முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கும்.

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை வனவிலங்குகளின் வாழ்விடச் சூழலுக்கு ஏற்ப பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்க தவறி தேக்குமர தோப்பையும், யூகாலிப்பிட்ஸ் மரங்களையும், பார்த்தீனியச் செடிகளையும், உன்னிச் செடிகளையும் வைத்து பணம் பார்க்கும் வனத்துறை. பல நூற்றாண்டுகளாக ஒரு நிலத்தில் நிலைத்து வாழக்கூடிய மக்களை தான்தோன்றித்தனமான வன சட்டங்களால் நில வெளியேற்ற நடவடிக்கைக்கான துவக்கமாகவே வனவிலங்கு தாக்குதல்கள், படுகொலைகளை வனத்துறை கட்டவிழ்த்து விடப்படிருப்பதை உணர முடிகிறது.

இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு வரி செலுத்தி, வாக்கு செலுத்தி, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய மக்களின் உயிராதார பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் வருவாய்த்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இருப்பதை கருத்தில் கொண்டு செயலாற்றியிருக்க வேண்டும். ஆனால் வனத்துறையின் அலட்சிய போக்கை மறைத்து துணை நிற்கும் பொருட்டு வனவிலங்கு தாக்குதல் படுகொலைகளை வேடிக்கை பார்ப்பதை மாவட்ட நிர்வாகம், அரசும் கைவிட வேண்டும். இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் வழங்குவதாலும் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகள் தடுப்பு நடவடிக்கைகள் மெத்தனமாக கையாளப்படுகிறதா என்கிற ஐயமும் எழுகிறது. வாழ்வாதார சிக்கல்களுக்கெதிராகவும் தன்னெழுச்சியாகவும் போராடும் இளைஞர்கள், பொதுமக்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மீது பொய் வழக்குகள் பதிந்து போராட்டத்தை ஒடுக்க நினைப்பதும் எதேச்சதிகாரப்போக்காகும்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்வதாலும் வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனப்பரப்புக்குள் நிவர்த்தி செய்வதாலும் மட்டுமே வனவிலங்கு தாக்குதல் படுகொலைகளை நிரந்தரமாக தடுக்க முடியும் என்பதையும். 2006 வன உரிமை அங்கீகாரச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி பூர்வக்குடி பழங்குடி மக்களையும் மலைவாழ் மக்களையும் வெளியேற்றிவிட்டு வனங்களை பாதுகாக்க முடியாது என்பதை தமிழக வனத்துறை உணரவேண்டும்.

ஆகவே, மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற மனித தன்மையற்ற கருத்துரிமையை முடக்கும் செயலை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மிரட்டி ஒடுக்கும் எண்ணத்தில் தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மேலும், கூடலூர் பகுதிகளில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியினங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் தொடர்ச்சியாக நடந்தேறிய வனவிலங்கு தாக்குதல் படுகொலைகள் குறித்தும் ஒரு முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1975438873691103724

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திபுதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து நீக்கம்! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்