பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் விரைவு நடவடிக்கைகள் – சீமான் கடும் கண்டனம்

24

பரந்தூரில் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கானத் திட்டத்தினை 1075 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் எதிர்த்து வரும் நிலையில், அதனைத் துளியும் மதிக்காமல் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்கின்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி உட்பட இன்னும் பல்வேறு அனுமதிகள் பெற வேண்டிய நிலையிலும் கூட பொதுமக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையினை தற்போது தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தியுள்ளது. கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையின்படி வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கான மதிப்பீட்டுத் தொகைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏகனாபுரத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களைக் கொண்டிருக்கும் வெளியூரைச் சேர்ந்த நில உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு மதிப்பீட்டுத் தொகையினை வழங்கி தமிழ்நாடு அரசு நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளது. 5750 ஏக்கர் திட்ட அளவில், 17.5 ஏக்கர் என்கிற சொற்ப இடங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், பொதுமக்கள் அனைவரும் தங்கள் நிலங்களைத் தாமாக முன்வந்து வழங்கி அதற்கானத் தொகையினை உடனடியாகப் பெற்றுக் கொள்வது போன்ற போலி பிம்பத்தினை உருவாக்கிட இது குறித்த செய்தி குறிப்புகளையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 1075 நாட்களுக்கு மேலாகப் போராடிவரும் பொது மக்களை ஒரு முறை கூடச் சந்திக்காத தமிழ்நாடு முதலமைச்சரின் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களை மடை மாற்றிட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தரமற்ற ஆட்சி முறையின் எடுத்துக்காட்டாகும். அரசானது மக்களுக்கான அரசு போல செயல்படாமல் பெரு நிறுவன கார்ப்பரேட் கட்டமைப்பு போல செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிவுகள், பொதுமக்களுக்கு எதிரான இன்னல்கள், வளக்கொள்ளைகள் முதலியவை பெருகிவரும் நிலையில் அவற்றைக் கண்டுகொள்ள நேரமில்லாத தமிழ்நாடு அரசுக்கு பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மட்டும் பல மடங்கு முனைப்பு காட்ட முடிகின்றது

இத்திட்டத்தை எவ்வாறேனும் கொண்டு வந்து விட வேண்டும் என்கின்ற குறுக்கு வழி நடவடிக்கைகளில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு விட்டுவிட்டு போராடும் பொது மக்களைச் சந்தித்து அவர்களின் இன்னல்களைக் கேட்டறிந்து இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்றும் பேரறிவிப்பு செய்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1943481108152127704?t=rU5tyJEaeJ8f9Mqd2OkiAw&s=19

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்தி“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடு-மாடுகளின் மாநாடு சீமான் தலைமையில் நடைபெற்றது!
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவுநாள்! – சீமான் மலர் வணக்கம்!