கடலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் தமிழ்நாடு முதல்வர் பங்கேற்கும் ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ என்ற மாநாட்டு நிகழ்விற்காக 7 மாவட்டங்களைச்சேர்ந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை வலுக்கட்டாயமாக அழைத்துவர பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசு பெற்றோர்களைக் கொண்டாட வேண்டும் என்றால் அதனை அந்தந்த ஊர்களில் உள்ள பள்ளிகளிலேயே பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் செய்யலாமே? அதைவிடுத்து ஏழு மாவட்ட பெற்றோர்களை ஓரிடத்திற்கு அலைய விடுவது எவ்வகையில் நியாயமாகும்?
இப்படி ஒரு மாநாடு நடத்தி தங்களை அலைக்கழிக்க வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையா? அல்லது திமுகவின் தேர்தல் பரப்புரைத்திட்டத்தின் முன்னோட்டமா?
இந்த மாநாட்டால் பெற்றோர்களுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் விளையப்போகும் நன்மையென்ன?
உண்மையிலேயே பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் என்ற அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இருந்தால் முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் செல்ல வேண்டும்.
பள்ளிகளின் உட்கட்டமைப்பினைச் செம்மைப்படுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்தி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுதான் தமிழ்நாடு அரசு பெற்றோர்களுக்குத் தரும் உண்மையான பாராட்டும், மரியாதையுமாகும்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி