திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், புச்சிரெட்டிபள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை, வாங்கனூர், சொரக்காய்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயங்கி வரும் 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பணியாற்றும், ஏறத்தாழ 10,000 நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த 1,00,000 விசைத்தறி தொழிலாளர்களுக்கு, உரிய ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் திருவள்ளூர்–அரக்கோணம் பகுதிகளில் வாழும் விசைத்தறி தொழிலாளர்களுக்குக் கடந்த 11 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய ஊதியம் பெற்றுத்தர எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து தவித்து வருவதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் கொடுஞ்சூழல் ஏற்பட்டுள்ளது. கடின உடல் உழைப்பு புரியும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு நசிந்துவிடாமல் காக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய பொறுப்பும், கடமையுமாகும்.
ஆகவே, திருவள்ளூர் திருத்தணிப் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு,
•விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வினை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•ஒவ்வொரு மாதமும் விசைத்தறி தொழிலாளர்களுக்குக் கூலியை முறையாக வழங்க வேண்டும்.
•ஆண்டுக்கு ஒருமுறை விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•1948 ஆம் ஆண்டுக் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ், நெசவாளர் ஊதிய உயர்வுக்கு அரசாணை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
•60 வயது நிரம்பிய நெசவுத்தொழிலாளர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.
•பத்திரப்பதிவு செய்து குடியிருக்கும் நெசவுத்தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
•பணியின்போது நிகழும் விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்.
•அமைப்பு சாரா நெசவாளர்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.
•நெசவாளர்கள் இறப்பு உதவித்தொகையை 30 ஆயிரத்திலிருந்து 1 இலட்சமாக உயர்த்த வேண்டும்.
•அரசு நிர்ணயம் செய்யும் கூலி அடிப்படையிலேயே வருமானச் சான்று வழங்கப்பட வேண்டும்.
என்பது உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நெசவாளர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து, கோரிக்கை வெல்லத் துணைநிற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி