கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட, சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்காக 45,000 ஏக்கர் நிலங்களைக் கொண்ட நிலவங்கி அமைப்பதற்கான அறிவிப்பின் அடிப்படையில் சென்னை வண்டலூரில் தொடங்கி மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி அமைந்திருக்கும் ஆவடி வட்டம் வெள்ளானூர் கிராமம், பொன்னேரி வட்டம் கும்மனூர் கிராமம் ஆகியவற்றில் மொத்தம் 626 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் நிர்வாக ஒப்புதலைக் கோரி சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ள செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் நிலவங்கிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழலில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட தமிழ்நாடு அரசை வலியுறுத்துமாறு ஆவடியைச் சேர்ந்த பொதுமக்கள் 24-10-2024 அன்று நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
மக்கள் நலனைப் பாதிக்கும் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடக்கோரும் மக்களின் கோரிக்கை வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரவளித்து, துணைநிற்கும் என உறவுகளிடத்தில் உறுதியளித்தேன்.



