தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

236

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கிறிஸ்தவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கைகளான சென்னை மயிலாப்பூரில் புதிய கல்லறைத் தோட்டம் ( மயானம் ) அமைக்க அரசு இட ஒதுக்கீடு செய்யவும் மற்றும் மூடப்பட்ட மந்தைவெளி புனித மேரி சாலை சென்னை மாநகராட்சி கிறிஸ்த்துவ கல்லறைத் தோட்டத்தை( மயானம் ) திறந்திடவும் தமிழ்நாடு அரசு மறுத்து வருவது அம்மக்களிடையே மிகுந்த இன்னலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உடல் அடக்கம் செய்ய இடமில்லை என்ற பொய்யான காரணங்களைக் கூறி கல்லறைத்தோட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மூடுவது கிறிஸ்தவ மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

கிறிஸ்தவப் பெருமக்களின் மத வழக்கப்படி இறந்தவர்களின் உடல்களை கல்லறைத்தோட்டங்கள் அமைத்து நல்லடக்கம் செய்வது அவர்களின் தொன்றுதொட்ட நடைமுறையாகும். ஆனால், காலப்போக்கில் சென்னை போன்ற மாநகரங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக கல்லறைத்தோட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் கிறிஸ்தவப் பெருமக்களின் நம்பிக்கைக்கும், வழக்கத்திற்கும் எதிராகவே உள்ளது மிகப்பெரும் கொடுமையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு கல்லறைத்தோட்டங்களுக்கு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அவற்றைப் பராமரித்து – பாதுகாக்க, கிறிஸ்தவ மக்களிடமும், அனைத்து கிறிஸ்தவ சபையினரிடமும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, ஒருமித்த முடிவெடுத்து, அதன் அடிப்படையில் திருச்சபைக்குச் சொந்தமான கல்லறைத்தோட்டங்களில் நடைமுறையில் உள்ளதுபோல், கல்லறைகளுக்கு அவற்றை அடையாளப்படுத்த வரிசை எண் – உரிமம் சீட்டு வழங்கவும், கல்லறைகளை வரிசையாக அமைக்கவும், கல்லறைக்குச் செல்ல சிறிய பாதைகள் அமைக்கவும், கல்லறைத் தோட்டத்தை சுத்தம் செய்து பராமரிக்கவும், அடக்கம் செய்யவும் , கல்லறை கட்டவும் நியாயமான கட்டணம் நிர்ணயித்தல், கல்லறைகளை பராமரிக்க குறைந்த கட்டணத்தை ஆண்டு சந்தாவாக நிர்ணயித்தல், ஏற்கனவே உள்ள கல்லறையில் மற்றொருவர் உடலை அடக்கம் செய்ய குறைந்த கால அளவு நிர்ணயித்தல் என்று சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கல்லறைத்தோட்டங்களில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளை சார்ந்த தலைவர்களை கொண்ட குழு அமைத்து புதிய கல்லறைத்தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்பதுடன், மூடப்பட்ட மற்றும் பயன்பாட்டில் உள்ள கல்லறைத்தோட்டங்களை அரசியல் தலையீடு இல்லாமல் கிறிஸ்தவ சபைகளே சுதந்திரமாகப் பராமரிக்க சட்டப்படியான பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
திருச்சபைக்குச் சொந்தமான கல்லறைத்தோட்டங்களில் நடைமுறையில் உள்ளதுபோல், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கல்லறைத்தோட்டங்களில், மண்ணால் ஆன ஏழைகளின் கல்லறை என்றும், கற்க்களால் கட்டப்பட்ட பணக்காரர்கள் கல்லறை என்றும் வேறுபாடு இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட அவர்களின் குடும்பத்தினர் கல்லறைகள் உள்ள இடத்திலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு கிறிஸ்தவப் பெருமக்களின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஓசூர் சந்திரசூடேசுவரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்