ரிசிவந்தியம் ஊராட்சியை  தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட  வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் 

139
ரிசிவந்தியம் ஊராட்சியை  தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட  வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஏறத்தாழ 60 கிராமங்களை உள்ளடக்கிய ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் வாழும் கிராமப்புற  மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான  அரசு சான்றிதழ்களைப் பெறவும், கோரிக்கை மனுக்களை அளிக்கவும் 50 கிமீ அப்பால் உள்ள சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து திரிய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ரிசிவந்தியத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மாணவர்களும், முதியவர்களும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய  மாநகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும்  வட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டபோதும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உறுதியளித்தப்படி ரிசிவந்தியம் வட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடாதது அப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது. புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக ரிசிவந்திய ஊராட்சி ஒன்றிய மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், அரசு இவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கிறது. ரிசிவந்திய மக்களின் நியாயமான இக்கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 18  பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றிய மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று,  தமிழ்நாடு அரசு  ரிசிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://twitter.com/SeemanOfficial/status/1540269417933975552?s=20&t=wcE51zo9OM5jq_jCL_JvXw

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஐயா மணிவண்ணன் – நினைவேந்தல் நிகழ்வு