எரிகாற்று உருளை விலை உயர்வுக்கு சீமான் கடும் கண்டனம்

259

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச்சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் விலையை 25 ரூபாய் ஏற்றி, 875 ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்கள் மனங்களில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வரலாறு காணாத வகையிலான விலையேற்றத்தாலும், அதனால் விளைந்த அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையுயர்வாலும் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாடச்செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது திணறித் திண்டாடிக்கொண்டிருக்கையில், இப்போது எரிகாற்று உருளையின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.

தவறானப் பொருளாதாரக்கொள்கையினாலும், பிழையான பொருளாதார முடிவுகளாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தைப் புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, இப்போது அதனை சமப்படுத்த மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றித் துளியளவும் சிந்திக்காது தனிப்பெரு முதலாளிகளின் இலாபவேட்டைக்கு வாசல் திறந்துவிடும் பாஜக அரசின் இச்செயல் வெட்கக்கேடானது. மனிதநேயமோ, மக்கள் பற்றோ இல்லாது, அதிகாரத்திமிர் கொண்டு தன்முனைப்போடும், தான்தோன்றித்தனத்தோடும் குடிகளை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது!

முந்தைய செய்திபல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கடலூர் கடல் தீபன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு