வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

27

துயர் துடைப்பு நிதி, ஆறு மாத வரி விலக்கு உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தொழில்களும் பெருமளவில் முடங்கிபோயுள்ளது. இதன்காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தொழில் முடக்கத்தால் வருமானமின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தினக்கூலிக்கு வாகனங்கள் இயக்கிவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனக் கடனுக்கான மாதத்தவணையைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஓட்டுநர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையான 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்ததால் பெரும்பாலான வாகன ஓட்டுநர்களுக்கு அந்த உதவித்தொகை கூட கிடைக்கவில்லை.

கடுமையான ஊரடங்கு காரணமாக நெடுநாட்கள் இயக்கப்படாது, சிறிதும் வருமானமின்றி தவித்துவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுக்கு பிறகுதான் வாகனங்களை இயக்க தொடங்கினர். இருந்தபோதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஓரிரு பயண வாய்ப்பே கிடைக்கின்றது. அதிலும் சமூகப்பரவலைத் தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியமையால், வழமையை விட குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிப்பதால் குறைந்தளவு வருமானம் தான் கிடைக்கிறது. அந்த வருமானமும் கடந்த இருமாதங்களாக அதிகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நட்டத்திலேயே முடிவடைகின்றன.

இவைமட்டுமின்றி சாலைவரி, சுங்கவரி, மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக எளிய மக்களால் வாடகை வாகனத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் சூழலே நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் பசியில் வாடி, வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகைய சூழலிலும் தமிழக அரசு வாடகை வாகனங்களுக்கான வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

பொதுமுடக்கம் முடிந்தாலும் இயல்பு நிலைத்திரும்ப குறைந்தபட்சம் 6 மாத காலமாவது ஆகும். இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு,

1. வாடகை வாகனக் கடனுக்கான மாதத்தவணைகளை இந்த ஆண்டு இறுதிவரை வசூலிக்கக் கூடாது எனவும். அந்தக் காலங்களில் வங்கிக் கணக்குகளில் தவணைகளுக்கான காசோலைகளைச் செலுத்தி பணம் இல்லாமைக்கான அபராதம் உள்ளிட்டவற்றை எந்த வங்கிகளும் வசூலிக்கக்கூடாது எனவும், இது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு-குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு விரிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும்.

2. வாடகை வாகனங்களின் தகுதிச் சான்று, வணிக ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்த ஆண்டு இறுதிவரை விலக்கு அளிக்க வேண்டும்.

3. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்‌.

4. தமிழகத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் (Badge or Licence)வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் தமிழக அரசு துயர் துடைப்பு நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும்.

5. அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

6. சாலை வரி, வாடகை வாகன வரி போன்ற வரிகளை இந்த ஆண்டு முழுமைக்கும் நீக்க வேண்டும்.

இப்பேரிடர் காலத்தில் அன்றாடப் பிழைப்புக்கே வழியின்றி அல்லலுறும் வாடகை வாகன ஓட்டுநர்களின் மிக நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி
அடுத்த செய்திகபசூரண குடிநீர் வழங்கும் நிகழ்வு – கீ.வ. குப்பம்