இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? – சீமான் கண்டனம்

80

அறிக்கை: ஈழ நிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வான்வழித்தாக்குதலின் மூலம் வீசி, ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது.

இந்திய வல்லாதிக்க பேரரசும், சிங்களப் இனவாத அரசும் உலகின் பல்வேறு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து ஈழ நிலத்தில் நிகழ்த்திய கோர இனப்படுகொலை முடிந்து பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்படாத நிலையில், நடைபெற்று முடிந்திருக்கிற இத்தேர்தலால் எவ்வித மாற்றமும் அந்நிலத்தில் நிகழப்போவதில்லை என்பதைத்தான் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன். அதனையேதான், தமிழக அரசியல் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள்.

சிங்கள இனவாதிகளுக்கு இடையேயானப் போட்டியில் எவர் வென்றாலும் அது தமிழர்களுக்கு எவ்விதப் பலனையும் தரப்போவதில்லை என்பதே மறுக்கவியலா உண்மை. இதனைத் தெளிவாக உணர்ந்தே அதிபர் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் எமது மக்கள். எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் களத்தில் நின்றபோதே அவரது முடிவை ஏற்று தேர்தல் புறக்கணிப்புச் செய்திருக்கிறார்கள் ஈழச்சொந்தங்கள். தற்போதும் அதனைப் போலவே, தேர்தலைப் புறக்கணித்து, இவ்வதிகாரம் எமக்கானதல்ல; எம்மை அடிமைப்படுத்தி ஆளுகிற அதிகாரத்தைத் தமிழர்கள் நாங்கள் அங்கீகரிக்க விரும்பவில்லை என்பதைக் கூறும்விதமாகப் புறக்கணிப்பு மூலமாக உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும், வடக்கு கிழக்கு மாகாண முதல்வர் பதவிக்கானத் தேர்தலிலும் பங்குபெற்று வாக்குச்செலுத்திய எமது உறவுகள் இத்தேர்தலைப் புறக்கணித்தமைக்கு அதுவொன்றே காரணமாகும்.

தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்டகாலமாகும். இந்த ஆட்சி மாற்றம் பெரும் அச்சுறுத்தலையும், கலக்கத்தையும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது மிகையில்லை.

இலங்கையின் இரண்டாம்தரக் குடிமக்களாகத் தமிழர்கள் நடத்தப்பட்டு, சிங்களக்குடியேற்றங்களும், சிங்களமயமாக்கலும் வீரியம்பெற்று தமிழர்களுக்கெதிரான வன்முறைச்செயல்களும், அடக்குமுறைகளும் இன்றும் தொடர்ந்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது ஊக்குவித்து வளர்த்துவிடும் சிங்கள அரசியல் தலைமைகள் ஒருபோதும் தமிழர்களின் நலனையும், நலவாழ்வையும் விரும்பாது என்பதனைக் கடந்த கால நிகழ்வுகளிலிருந்தே அறிந்துகொள்ளலாம். இறுதிகட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கேட்டு குடும்பத்தாரும், உறவினர்களும் இன்றைக்கு வரை போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு ஒரு தீர்வினையும் சொல்ல மறுக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள்.

கோத்தபய ராஜபக்சே பதவியேற்றவுடனே தனக்கு வாக்களிக்காத தமிழர்கள் மீது தனது ஆதரவாளர்களை ஏவித்தாக்குதல் நடத்தத் தொடங்கி இருப்பதாக வரும் செய்திகளைப் பன்னாட்டுச் சமூகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் சுட்டிக்காட்டுகிறேன். தமிழர் தாயகத்தை முற்று முழுதாக சிதைத்தழித்து சிங்களமயக்காலின் மூலம் முழுவதுமாகத் தமிழர்களை அழித்தொழித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் சிங்கள இனவெறியர்களின் ஒரே நோக்கமாகும். மற்றபடி, அவர்கள் சனநாயகரீதியிலான நியாயமானத் தீர்வுகளுக்கு உடன்படத் தயாராக இல்லை என்பதைத்தான் அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் எடுத்துரைக்கிறது. குறைந்தபட்சம், வடகிழக்குப்பகுதியைத் தமிழர் தாயகமாக அறிவித்து 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி குறைந்தபட்ச அதிகாரத்தைத் தமிழர்கள்வசம் வழங்கக்கூட சிங்களப் பேரினவாதிகள் தயாராக இல்லை என்பதன் மூலம் அவர்களது இனவெறியையும், இன ஒதுக்கலையும் அறிந்துகொள்ளலாம்.
ஒற்றை நாட்டில் ஒருமித்து சிங்களர்களோடு தமிழர்கள் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்கிற தமிழர்களின் மனநிலையைத்தான் நடந்து முடிந்திருக்கிற தேர்தல் பிரதிபலித்திருக்கிறது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர் என்பது மட்டுமல்ல, சீனாவில் ஆதிக்கத்திற்கு துணைபோகிறவரும்கூட. அவரது சீன ஆதரவு செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கே பேராபத்தினை விளைவிக்கக்கூடும் என்பதனை உணர்ந்து, இனியாவது இந்தியப் பேரரசு தார்மீகத்தோடு தமிழர்கள் பக்கம் நிற்க முன்வர வேண்டும்.

ஆகவே, உலகத்தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையான ஈழ இனப்படுகொலைக்குத் தலையீடற்ற ஒரு பன்னாட்டுப் பொது விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து தனித்தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஆகியவைகள் நடத்தப்படுவதற்கான ஒரு சூழலை இந்திய அரசும், பன்னாட்டுச்சமூகமும் ஏற்படுத்தித் துயருற்று இருக்கிற தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: டிச.-01, மள்ளர் மீட்புக் களம் ஒருங்கிணைக்கும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்