சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை : 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்த வழக்கு

37

கட்சி செய்திகள்: சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை : 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்த வழக்கு | செய்தியாளர் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 9 நாம் தமிழர் உறவுகளும் இன்று 20-07-2018 காலை 10 மணியளவில் சேலம் மத்தியச் சிறைச்சாலையிலிருந்து பிணையில் விடுதலையடைந்தனர்.

எதற்காக சேலம் 8 வழிச்சாலை..?

அடுத்த 10 ஆண்டுகளில் கார்களின் தேய்மானத்தைக் கணக்கிடும் அரசு,மக்கட்தொகைப் பெருக்கத்தினால் நீருக்கும் சோறுக்கும் ஏற்படவிருக்கும்தேவையை ஏன் கணக்கிடுவதில்லை..?

எந்தத் தொழிற்சாலை அரிசியையும் பருப்பையும் உற்பத்தி செய்யும்? காய்கறி, பழங்களை விளைவிக்கும்? அவை நிலங்களில் தான் விளைந்தாகவேண்டும்! எங்கள் நிலம் தராத பணத்தையா நீங்கள் தந்துவிடப்போகிறீர்கள்..?

மலைகள், காடுகள், கிராமங்கள், வேளாண் நிலங்களை அழித்து,மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயற்படுத்துவது தான்வளர்ச்சித் திட்டமா?

சேலம் மத்திய சிறை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், ” என்னைக் கைதுசெய்வதன்மூலம் மக்களை அச்சுறுத்துகிறார்கள். அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத்தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம். இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித மக்கள் விரும்பித்தான் நிலத்தைக் கொடுத்தார்கள் என முதல்வர் சொல்கிறார். அப்படியென்றால், அந்த மக்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. நேற்று என்னைக் கைதுசெய்துவிட்டு இன்று பிணையில் விடுகிறார்கள் என்றால், இது ஒரு காரணமும் இல்லாத கைது என்பது நிரூபணம் ஆகிறது. எட்டு வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம். காரைப் பற்றி கவலைப்படுபவர்கள் நீரையும் சோறையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. பேரழிவை நோக்கி இந்த தேசம் நகர்ந்துகொண்டிருக்கிறது. எட்டு வழிச் சாலைபற்றிப் பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா?

ஆட்டுத் தோலை விற்றுக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு கோடி கோடியாகப் பணமும் நகையும் எப்படி வந்தது? எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது. ஒரு நாட்டின் வளம் என்பது மலைகள். அதை அழித்துவிட்டால், மீண்டும் எப்படி உருவாக்க முடியும்?’ என்றார் ஆதங்கத்துடன்.

முந்தைய செய்திசீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் – 24 பேர் கைது
அடுத்த செய்திசேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து போராடி சிறைசென்ற 37 நாம் தமிழர் உறவுகள் விடுதலை