முகப்பு தமிழீழச் செய்திகள்

முடிந்தால் இராணுவத்தையும் ஆளுநரையும் வெளியேற்றிப் பாருங்கள்: விக்னேஸ்வரனுக்கு விமல் சவால்!

43

வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ. வடமாகாணசபையை கைப்பற்றியதால் முழுநாடும் தமக்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சிரிபாயவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; இனவாத, பிரிவினைவாத அரசியல் பயணத்துக்கு நாட்டை மீண்டும் கொண்டுசெல்ல எம்மால் இடமளிக்க முடியாது. வடக்கில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த பயன்படுத்தினால் அதற்கான முழு ஆதரவையும் நாம் வழங்குவோம்.

அதைவிடுத்து, தமிழ், சிங்கள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் தனி இராச்சிய எண்ணக் கருவை கொண்டு சென்று நாட்டில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கவும் வெளி அழுத்தங்களின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்தால் நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதை நாம் ஏன் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதவேண்டும்.

இலங்கை, இந்தியா போன்று லோக் சபையின் கீழ் ஆட்சிக்குட்படுத்தப்படும் நாடு அல்ல. அத்துடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்வதைச் செய்யும் நாடும் அல்ல. ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ, சோனியா காந்தியையோ, மன்மோகன் சிங்கையோ விக்னேஸ்வரன் சந்தித்தால் அது எமக்குத் தேவை இல்லை. எவரும் எவரையும் சந்திக்கலாம். வடமாகாண ஆளுநரையும் வடக்கிலுள்ள இராணுவத்தையும் வெளியேற்ற முடியுமா என விக்னேஸ்வரன் முயற்சித்துப் பார்க்கட்டும். இரவில் தூக்கத்தில் தெரிவதை எல்லாம் செய்ய முடியும் என இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் அமைச்சர் விமல்.

முந்தைய செய்திசுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்கு தேர்தல் வெற்றியைக் கூட்டமைப்பு பயன்படுத்துமா?
அடுத்த செய்திதமிழீழ விடுதலைப்போரின் தொடர்ச்சியை யாரும் நிறுத்திவிட முடியாது: – காசியானந்தன்!