சிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது

10

சிறீலங்கா மனித உரிமைகளை மீறுமானால் அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை உள்ளடக்கிய பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழுவினர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா ஆகியோருக்கு இடையில் இன்று நியூயோர்க்கில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் பொதுநலவாய அமைப்பு தமது மனித உரிமைகள் தொடர்பான கொள்கையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிரதி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் இறுதிப்போரின் போது சிறீலங்காப் படையினரும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர்.

எனினும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு சிறீலங்கா அரசாங்கம் இடம்தர மறுக்கிறது.

இந்தநிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை சர்வதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமையையும் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் உதவி பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்திதேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? – இதயச்சந்திரன்
அடுத்த செய்திசீமான் – பேரறிவாளன் சந்திப்பு