புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும் அண்ணாரின் வாழ்க்கைக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது!!

986

நன்றி:
லட்சுமிநாராயணன்
புதுக்கோட்டை நாம் தமிழர்
தொடர்புகளுக்கு: 9884191429
யார் இந்த தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார்? – வாழ்க்கை குறிப்பு!!!

எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும், தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது. அதனால் ஈர்க்கபெற்று, சக மாணவர்கள் திரைப்பட, சாதி தலைவர்களின் ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் முத்துக்குமார் மணிக்கணக்கில் காரல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே’வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அண்ணனை சிறுவயதில் அறிந்த தோழர்கள்!

பின்னர் சிறிதுசிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்திலே பற்றி எறிந்த தீ மெதுவாக அண்ணனையும் பற்றிக் கொள்கிறது. பழனியில் பள்ளிபருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார். ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார். குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார். அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார். தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யபெற்று பணியாற்றுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார். அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார். தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண்போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் அசைன்மென்ட் (பொறுப்பு) அண்ணன் முத்துகுமாரிடம் வழங்கபடுகிறது. இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள். அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் ‘கெட்டப்’போடு (பாவனையில்) தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார். அண்ணனின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கபெற்றார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார்.

போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது. வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார். அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கபெருகிறது. தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கபடாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கபடுகிறது. அதனால் பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.

ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்திகொள்கிறார், பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கபடுகிறார். நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.

மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது. தமிழ் தேசிய சனநாயக அரசியலில் தீவிரமாகிறார். தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார். ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது! ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார். தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதமபரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்க்கடிக்கிறார் (ஆனால் அதன் பின் தேர்தலில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது சிதம்பரம் மற்றும் கருணாவின் தனித்திறமை சார்ந்தது).

மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெ.தி.க மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் அனுப்பியதாக கருணாநிதி அரசால் ஜாபர் சேட்டால் கைது செய்யபடுகிறார்.

ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல புலிக்குட்டிகளை வளர்த்தெடுக்கிறார்! இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். இந்த மூன்று மாவட்டங்களிலுமே அப்போதைய கருணாவின் ஆளுங்கட்சிக்கு இணையான செயல்பாடுகளை நாம் தமிழர் கொண்டிருந்தது என்பது ஆளுங்கட்சியினரே ஏற்றுக்கொண்ட வாதம். ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக இந்த தமிழினத்தின் அறிவிக்கபடாத தளபதி மர்ம நபர்களால் புதுகை நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் பிப்ரவரி 16, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தபட்டார். இந்த பாதகத்தை செய்தது தனிப்பட்ட எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இது எதிரியும் அவனை சார்ந்த உற்றார் உறவினரும் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்பதை எளிதில் அவதானிக்க முடியும். ஆகவே, இது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுகை மாவட்டத்தின் ‘சிதம்பர ரகசியம்’!

அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கு பெற்ற அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள், என்னால் முத்துகுமார் பல நேரங்களிலும், அவனால் நான் பல நேரங்களிலும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம் என்றும் முத்துக்குமார் எனது சிறைத்தோழன் என்றும் சொன்னது அண்ணனை பற்றிய முத்தாய்ப்பாய் அமைகிறது. அப்போது பேசிய அய்யா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார். சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார். முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார். சமீபத்தில் உரையாடும்போது தோழர் ஏகலைவன், அண்ணனோடு நெருங்கி பழகியதை வைத்து, போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் இவன் அவ்வாறு பிறந்தவன் என்றார்.

சுருக்கமாக,

10 ஆண்டுகாலம் தமிழ் தேசிய விடுதலைக்காக சிறை வாழ்வு

5 ஆண்டுகாலம் தலைமறைவு ஆயுத போராட்ட வாழ்வு

4 ஆண்டுகாலம் மக்கள் சனநாயக அரசியல் வாழ்வு

சாகத் துணிந்தவன் சரித்திரம் ஆகிறான்!

சாகப் பயந்தவன் தரித்திரம் ஆகிறான்!

-தமிழ் தேசிய தாலைவர் மேதகு பிரபாகரன்

நன்றி – கிரேசு கிருஷ்ணா

முந்தைய செய்திவிதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!
அடுத்த செய்திபட்டுக்கோட்டையில் 16-02-2012 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அரசியல் போர் முழக்கம் – துண்டறிக்கை இணைப்பு!!