தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி : சீமான் எதிர்ப்பு

49

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவின் இராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:

தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி : சீமான் எதிர்ப்பு

இலங்கை இராணுவத்தின் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் இராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

டெல்லியில் நேற்று இலங்கை இராணுவத்தின் செயலர் மேஜர் ஜென்ரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய இராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதல் தலைமை இயக்குனர் மேஜர் ஜென்ரல் ஐ.பி.சிங் தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென இந்திய இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றன. தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் என்று இந்திய இராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமன்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும். இந்திய இராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை இராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும்.

இலங்கை இராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. ஐ.நா.அமைதிப் படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை இராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளின் மீது பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம்சாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. ஆனால் இந்தியாவின் இராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக் கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதைவிடக் கேலிக் கூத்தும் கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்?

பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் இராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றஞ்சாற்றப்படும் நாட்டிற்கு இராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும். இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய இராணுவத்தின் இந்த முடிவு ஒரு சரியான அறிகுறியாகும்.

முந்தைய செய்திநாளை ஜூலை 3, இராயபுரம் பகுதில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.
அடுத்த செய்திஇன்று 03.07.11 மாலை சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது