இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்

26

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தங்களை நிர்பந்திக்கவில்லை என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளது இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:

இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது :  சீமான்

இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அரசுக் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொழும்பு சென்ற சிங்சங்கர் மேனன், அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட இந்தியக் குழு, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்தச் சந்திப்பு நீடித்ததாக கூறப்பட்டது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்சங்கர் மேனன், “இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுதாக இந்தியாவின் ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஆனால் கொழும்புவில் இருந்து வெளியான செய்திகள் இதற்கு நேர் முரணாக இருந்தது. “தமிழர் பிரச்சனைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த விததிலும் தலையிடாது (it is up to the Sri Lankan Government to find a political solution which it is comfortable with and India is not interfering in the matter) என்று சிவசங்கர் மேனன் கூறியதாக கொழும்பு செய்திகள் தெரிவித்தன. இந்த முரண்பாட்டை ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டிருந்தது.

அதனை நிரூபிக்கும் வண்ணம் கொழும்புவில் அதிபர் ராஜபக்ச அளித்த பேட்டி அமைந்துள்ளது. “சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளியுங்கள் என்று எந்த நிர்பந்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா நிர்பந்திக்கவில்லை” என்று ராஜபகச் தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார்.

சிங்சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வந்த இந்தியக் குழு என்னதான்  பேசியது என்று கேட்டதற்கு, “எப்போதும் பேசப்படும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள்தான் பேசப்பட்டன” என்று ராஜபக்ச கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, தமிழர் பிரச்சனை குறித்து வேறு எதையாவது இந்தியக் குழு பேசியதா என்ற வினவியதற்கு, தனது அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பரிந்துரைகளை சிங்சங்கர் மேனன் சுட்டிக்காட்டியதாகக் கூறியுள்ளார்!இலங்கை அதிபர் ராஜபக்சவின் பதில் ‘இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தாங்கள் அக்கறை கொண்டு செயல்படுவதாக’ கூறிவரும் இந்திய மத்திய அரசின் இரட்டை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. தமிழர் பிரச்சனையை எவ்வளவு சாதாரணமான ஒரு விடயமாக இந்திய மத்திய அரசு கையாள்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டே டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையை சுட்டிக்காட்டியிருப்பதாகும். தமிழர்களை அரசியல் அபிலாஷைகளுக்கு, ராஜபக்சவின் அரசியல் அடிமையாக செயல்பட்டுவரும் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையா தீர்வு? “டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அதுவே போதுமானதாகும்” என்று கூற சிங்சங்கர் மேனன் யார்?

இதிலிருந்து தமிழர்கள் மீது, அவர்கள் சற்றும் ஏற்காத ஒரு தீர்வை திணிக்க இலங்கை அரசுடன் இணைந்து இந்திய மத்திய அரசும் முயற்சிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. தமிழர்கள் மீது தாங்கள் விரும்பும் ஒரு தீர்வைத் திணிக்க டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைகளை பயன்படுத்த இலங்கையும், இந்தியாவும் முயற்சியெடுத்து வருகின்றன என்பதும் தெளிவாகிறது. இப்படிப்பட்ட குறுக்கு வழி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று எச்சரிக்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசு எப்படிப்பட்ட ஏமாற்று நாடகத்தை நடத்தி வருகிறது என்பதை சிவசங்கர் மேனனின் இலங்கைப் பயணத்தில் இருந்து தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையை மற்ற மாநில அரசுகளின் முதல்வர்களிடமும், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் தமிழக முதல்வர் கொண்டு சென்று மத்திய அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இலங்கை தொடர்பாக இன்றைய மத்திய அரசு கடைபிடித்து வரும் அயலுறவுக் கொள்கை இந்தியாவிடமிருந்து ஈழத்தமிழர்களை அந்நியப்படுத்திவிட்டது. அவர்களின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்தை அழிக்க துணைபோயுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இலங்கைத் தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கை மாற வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.

சிங்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியக் குழு, தமிழக மீனவர்களின் பாதுகாப்புக் குறித்தும் எந்த பேச்சும் நடத்தவில்லை என்பதைத்தான் இன்றளவும் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலால் நிரூபணமாகிறது. நேற்றைய தினம், சிங்கள மீனவர்களைக் கொண்டு தமிழக மீனவர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளதும், அவர்களின் வலைகளை அறுத்துள்ளதும் மீனவர்களுக்கிடையே மோதலை உண்டாக்கி பிரச்சனையை திசை திருப்ப அந்நாட்டு அரசு முயற்சிப்பதையே காட்டுகிறது.

இத்தாக்குதல்கள் அனைத்திற்கும் இந்திய மத்திய அரசு கடைபிடித்துவரும் இலங்கை ஆதரவுக் கொள்கையே காரணம். சட்டப் பேரவைத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் தலைமை பாடம் கற்றதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையின் அணுகுமறை தொடர்ந்து தமிழர் விரோத போக்கில் சென்றால், உள்ளாட்சித் தேர்தல்களிலும் அது படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

முந்தைய செய்திஅரசியல் தீர்வுக்கு இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை – ராஜபக்சே
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது