கரோனா வைரஸ் தாக்குதல்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மெத்தனப்போக்கோடு இருக்கிறது! – சீமான் கண்டனம்

87

அறிக்கை: கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சர்வதேச மருத்துவ அவசர நிலையாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்தும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மெத்தனப்போக்கோடு இருக்கிறது! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி சீனா முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 12000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இல்லாத வகையில் உலகையே உலுக்கி வரும் இந்தக் கொடிய வைரஸ் நோய், சீனா மட்டுமின்றி அங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவி இன்று அதன் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது கவலையளிக்கிறது. சீனாவிலுள்ள வூகான் பல்கலைக்கழகத்தில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகிறது.

இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சீன அரசு மட்டுமன்றி, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற எல்லா நாடுகளும் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிற இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடும், உலகின் மோசமான பொது சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றானதுமான இந்திய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தொடக்கம் முதலே இந்தப் பிரச்சனையை அணுகுவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

டிசம்பர் மாத இறுதியில் இந்த மர்ம நோய் குறித்து கண்டறிந்த சீன அரசின் தகவலையடுத்து சனவரி முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கும் இதனைத் தெரியப்படுத்தியும்கூட இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்து எந்த விதமான பொது அறிவிப்பையும் வெளியிடாமல் மக்களிடமிருந்து மறைத்ததும், இந்நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததும் ஏன் என்ற கேள்வி எழாமலில்லை.

மேலும், சனவரி இரண்டாவது வாரத்தில் சீனா முழுவதும் இந்த நோய் பரவுவது தீவிரமான நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியும், சனவரி மூன்றாவது வாரத்தில் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்குச் சென்றவர்களிடம் அந்த நோய் கண்டறியப்பட்டதை மீண்டும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும், சீனாவின் அண்டை நாடான இந்தியாவிற்கு அங்கிருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்துவது குறித்தோ, நோய்த்தொற்று கண்டறியப்பட்ட டிசம்பர் மாத இறுதியிலிருந்து இன்றைய நாள் வரை உலக சுகாதார நிறுவனத்தோடு தொடர்பிலுள்ள இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதனிடமிருந்து தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வந்தவர்களிடம் மேற்கொண்ட சோதனைகள் குறித்தோ, மேற்கொண்டு அவர்களை எவ்வாறு மருத்துவ ரீதியில் அணுகுகிறது, நோய் பரவாமல் இருக்க எந்த விதமான நடைமுறைகளைக் கையாள்கிறது என்பது குறித்தோ ஒரு வெளிப்படையற்றத் தன்மையையே இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுவரை கடைபிடித்து வருகிறது.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மற்ற மேலை நாடுகளில் கடைபிடிக்கப்படும் உச்சபட்சப் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் கூடிய நடைமுறைகளையோ, சர்வதேச சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு நடைமுறைகளையோ முறையாகக் கடைபிடிக்காமல், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும் வகையில் சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையங்களில் பயணிகள், பணியாளர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே வைத்து மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்வதும், பிறகு அங்கிருந்து வந்தவர்களை மக்கள் வசிக்கும் அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி வைப்பதும், நோய்த்தொற்று சந்தேகத்திற்கு இடமானவர்களை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே வைத்து சிகிச்சை அளிப்பதும் மத்திய, மாநில அரசுகள் இன்னும் இதன் தீவிரத் தன்மையை உணராததையே காட்டுகிறது.

தற்போது கரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்த அறிவிப்பிற்குப் பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது குறித்து நாட்டு மக்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காதது ஒரு அக்கறையற்றத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் இதுகுறித்து எந்தவித உடனடி தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது போல் தெரியவில்லை.

இத்கைய அபாயகரச் சூழலில் மக்கள் வெளிநாடுகள் மற்றும் வெளியூர் பயணங்களைத் தவிர்க்குமாறும், கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறும், கூடுமான வரை அடிக்கடி கைகளை நன்கு கழுவி சுத்தத்துடன் வைத்திருக்கவும் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் மருத்துவரை அணுகி அதற்கானச் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவும். இந்த வைரஸ் தொற்றிய பிறகு அதன் தாக்கம் தெரிய வர 14 நாட்கள் வரைக்கூட ஆகுமென்பதால், இது குறித்து அலட்சியத்துடன் இல்லாமல் மருத்துவமனையை அணுகி குரோனா வைரஸ் நோய்த்தொற்றா இல்லையா என்பதனை சோதித்துக் கொள்ளவும்.

தமிழ்நாடு அரசு அவசரகால நடைமுறைகளாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளை இது குறித்து அதிகக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தவும், இந்த நோய் மற்றும் அதன் தாக்கம் குறி்த்தத் தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி மக்கள் முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்க உதவுமாறும், நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளா எல்லைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு தமிழகத்தில் பரவாமல் தடுக்க தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மேற்குறிப்பிட்ட குறைகளைக் கலைந்து, இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான அனைத்து வித நடவடிக்கைகளையும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளுமாறும், மத்திய அரசு இப்பிரச்சனையை வெளிப்படைத்தன்மையுடனும், மிகுந்த கவனத்துடனும் முறையாக அணுகுமாறும், அரசு மேற்கொள்ளும் முறையான மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் மக்களிடமுள்ள இந்நோய் குறித்த அச்சத்தை அகற்றி நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி
அடுத்த செய்திகிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி