அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் 12 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு

169

அறிவிப்பு:

வேளாண் விளைநிலங்களை அழித்து,
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும்
12 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடத்தையும், வேளாண் விளைநிலங்களையும் காக்க போராடிவரும் அப்பகுதி கிராம மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவிக்கவும் கோரிக்கைகளைக் கேட்டறியவும் வருகின்ற 26-08-2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஏகனாபுரம் உட்பட அனைத்து கிராமங்களுக்கும் செல்லவிருக்கின்றார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுதுகுளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சசிக்குமார் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல் செய்தி
அடுத்த செய்திதிருமஞ்சனக் கட்டணம் பெற பண்டாரத்தினரே உரித்தானவர்கள்! – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு