பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

446

செய்திக்குறிப்பு: *தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்குள் எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிடுவோம்! – சீமான் அதிரடி* | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று 02-11-2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெற்றது.

சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுடரேற்றி மலர்வணக்கம், வீரவணக்கம் செலுத்தினார். மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியிருப்பதாவது,

தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறோம். ஏறக்குறைய சரிபாதி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்குள் (நவ. 26) எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிடுவோம். முன்தயாரிப்புதான் எங்களுக்கு இருக்கிற ஒரே வலிமை. அதனால், முன்கூட்டியே வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடுவோம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுகிறோம்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியது போல், மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீட்டிற்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இறையாண்மை என்பதில், இறை என்றால் அரசு என்பதையும், ஆண்மை என்றால் ஆளுமை என்பதையும் குறிக்கிறது. எனவே, இறையாண்மை உள்ள எந்த அரசும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையானதாகக் கருத வேண்டும். மருத்துவ மேற்படிப்புகளில் 50% இட ஒதுக்கீட்டை பெற தமிழக அரசு ஆளுமை திறமையுடன் செயல்பட வேண்டும் அதேபோல, எழுவர் விடுதலையிலும் உறுதியான நடவடிக்கை எடுத்து அவர்களை 161வது சட்ட விதியின் படி விடுதலை செய்ய முன்வர வேண்டும். இது அவர்கள் வழிப்பற்றி ஆட்சிசெய்வதாகக் கூறும் அம்மையார் ஜெயலலிதாவின் கனவும் கூட என்பதனால் தமிழக முதல்வர், எழுவர் விடுதலையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

தமிழகச் சட்டமன்றத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு இதுவரை பிரதிநிதித்துவமே இல்லாததுபோல பாஜகவின் வி.பி.துரைசாமி பேசுவதை எப்படி ஏற்கமுடியும்? இப்போதே 48க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். தமிழகத்தின் ஆதிகுடிகளான சலவைத்தொழில் செய்யும் வண்ணார்கள், பானை செய்யும் குயவர்கள், முடி திருத்தும் மருத்துவக்குலத்தினருக்கு ஒரு இடமாவது பிரநிதித்துவம் உள்ளதா என்று கேட்டுச் சொல்லுங்கள்? தமிழக அரசியல் வரலாற்றிலேயே அவர்களுக்குத் தேடித்தேடி வாய்ப்பளித்துத் தேர்தலில் நிற்க வைத்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். வேறு எந்தக் கட்சியாவது வாய்ப்பளித்துள்ளதா? தமிழகத்தில் பிறமொழி பேசும் மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் இடமிருக்கிறது. ஆனால், தமிழர்களுக்கு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டில் இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரும் தமிழர் ஆகிவிட்டார்கள் என்று பேசினார்களே? பிறகு, ஏன் இந்தப் பிரதிநிதித்துவப் பேச்சு வருகிறது? யார் தமிழர்கள்? யார் யாரெல்லாம் தமிழர்கள்? என்று கேட்டவர்களுக்கெல்லாம் இப்போது புரிந்திருக்கும் யார் தமிழர் என்று. எனவே, தெலுங்கு பேசும் மக்களுக்கு இங்கே பிரதிநிதித்துவம் இல்லை என்பதல்ல; பிரதிநிதித்துவத்தை அதிகமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் பிரச்சினை.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்