கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் அருண் (எ) ஜெயச்சந்திரன் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

45

நாம் தமிழர் கட்சி &- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி அருண் (எ) ஜெயச்சந்திரன் அவர்கள் நேற்றிரவு (31.03.2023) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய அரசியலை தாங்கிப்பிடிக்கும் விழுதுகளாக விளங்கும் நாம் தமிழர் கட்சியின் அன்பு பிள்ளைகள் இளம் வயதிலேயே உயிரிழக்கும் செய்திகள் சொல்லொணா துயரத்தை அளிக்கிறது. சாலைகளில் பயணம் செய்யும்போது மிக கவனமாக பயணிக்க வேண்டுமென்றும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசமும், மகிழுந்தில் செல்லும்போது இடைவாரும் உறுதியாக அணிய வேண்டுமென்று அன்புபிற்குரிய தம்பி, தங்கைகளுக்கு நான் தொடர்ச்சியாக பலமுறை வலியுறுத்தி வருகிறேன். இருப்பினும் அவ்வப்போது விபத்துக்களால் தம்பி, தங்கைகள் உயிரிழந்துவிட்டதாக வரும் செய்திகள் தரும் வலியினை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
எனதருமை தம்பி, தங்கைகளின் இழப்பென்பது நம் குடும்பத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்குமான இழப்பு மட்டுமல்ல; நம் மண்ணிற்கும், மக்களுக்குமான இழப்பு, ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும் என்பதை ஆழமாக உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் பதிய வைத்து மிகக்கவனத்துடன் பயணிக்க வேண்டுமென மீண்டும், மீண்டும் கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.
தம்பி அருணின் ஈடுசெய்யவியலா இழப்பினால் பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி அருண் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரூர் தொகுதி – மொரப்பூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் பிரபாகரன் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
அடுத்த செய்திவேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை! – இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து