முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்களின் மறைவென்பது தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

79

முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
வானொலி அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், செய்தித்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை இயக்குநர் என்று பல்வேறு அரசுப்பணிகளைத் திறம்பட வகித்த ஐயா அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும், செம்மொழி ஆய்வு நிறுவனத் துணைத்தலைவராகவும் பெருந்தொண்டாற்றிய புகழுக்குரியவர்.
தமிழ், ஆங்கிலம் என இருமொழி வித்தகராக விளங்கிய ஐயா ஔவை நடராசன் அவர்கள், சங்க இலக்கியங்கள் குறித்த தமது சுவை மிகுந்த, ஆய்வுநிறை பேச்சின் மூலம் ஏராளமான இளந்தலைமுறையினரை தமிழ் இலக்கியங்கள் நோக்கி ஈர்த்த பெருமைக்குரியவர். ஐயா அவர்களின் மறைவென்பது தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா ஔவை நடராசன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
அடுத்த செய்திமைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்