‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு

334

எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின் முதன்மையான நாளேடாக வளர்த்தெடுத்த பெருந்தகை, தமிழின் மீதும், தமிழர் மீதும் பெரும்பற்று கொண்ட காரணத்தினால், ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று முழக்கத்தை முன்வைத்தவர். இனத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக, தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக ‘நாம் தமிழர்’ என்ற அரசியல் பேரியக்கத்தைத் தொடங்கியவர், எங்களுடைய ஐயா ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களிடைய 41வது நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், தமிழ்மொழி மீட்சி, தமிழின எழுச்சி என்ற உயரிய நோக்கத்திற்காகத் தன் வாழ்நாள் முழுதும் அரும்பாடு ஆற்றிய அவருடைய பணியை, அவருடைய பிள்ளைகள் நாங்கள் சமரசம் இன்றித் தொடர்ந்து முன்னெடுப்போம் என்ற உறுதியை ஏற்கிறோம். மதிப்புமிக்க பெருந்தகை, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடு தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் அவர்கள் அளித்த பதிலுரையின் சுருக்கிய எழுத்துவடிவம்,

மோடி ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வந்து தொடங்கிய திட்டங்கள் எல்லாம் இதுவரை நன்மைகளைக் கொடுத்திருக்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் ஒவ்வொரு முறையும் வரும்போதும் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே செங்கல் ஒன்றிருந்தது, அதையும் ஒருத்தர் எடுத்துச் சென்றுவிட்டார். ஆட்சிக்கு வந்து எட்டாண்டுகளில் மோடி அவர்களால் தமிழ்நாட்டிற்கு எத்தனை திட்டங்கள் அறிவிக்கப்பட்டது? அவையெல்லாம் நிறைவேறிவிட்டதா? அதனால் நன்மைகள் கிடைத்து விட்டதா? வெற்று அறிவிப்புகள் காதுகளுக்கு செய்தியாக வரும்போது இனிக்கும், வேறு ஒன்றும் நடக்காது.

தமிழ்நாட்டில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பேசினாலே, எதிர்க் கருத்து வைத்தாலே வழக்குப்போட்டுச் சிறைப்படுத்துவது என்பதுதான் தமிழ்நாட்டில் தற்போதைய நிலையாக இருக்கிறது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்துப் பதிவு செய்தாலே சிறைப்படுத்துவது, பேசினாலே, எழுதினாலே உடனே குண்டாசு சட்டம் பாய்கிறது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது எப்படிச் சட்டம் ஒழுங்குச் சரியாக இருக்க முடியும்? விமர்சிப்பதால் ஆட்சியாளர்கள் தங்களுடைய நற்பெயர் கெடுகிறது என்கிறார்கள். அவர்கள் செய்கின்ற செயலில் கெடாத நற்பெயர், செய்தியாக வரும்போது கெட்டு விடுகிறதா? பெயர் கெட்டுவிடும் என்றால் செய்தி வராமல் செயலைத் திருத்திக்கொள்ளுங்கள். ஆட்சிக்கு வரும்முன் யாராவது திமுகவைப் பற்றி இவ்வாறு எழுதினார்களா? சங்கர், மாரிதாஸ் போன்றோர் பேசினார்களா? நாம் தமிழர் கட்சி விமர்சித்ததா? விமர்சிக்கவே கூடாது என்பதை மக்களாட்சி என்று எவ்வாறு ஏற்க முடியும்? பாராளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றின் அடிப்படையே வாதம், பிரதிவாதம், தர்க்கம்தானே? நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் வாதம் வைத்து, அதற்கு எதிர்வாதம் வைத்துதானே சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள்? நீதிமன்றத்தில் ஒரே ஒரு வழக்கறிஞர் சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் தீர்ப்பு சொல்வதில்லையே? எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சொல்லும் கருத்தையும் கேட்கிறார்கள்தானே? அந்த சனநாயகம் திமுக ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இல்லாதது ஏன்? ஒரே ஒரு கருத்து, அதனை யாரும் எதிர்க்கவே கூடாது, ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது சனநாயகமா? கொடுங்கோன்மையா?

இவ்வாறு சீமான் அவர்கள் கூறியுள்ளார்.

முந்தைய செய்திஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை