25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி இன்று (11-06-2016) நடந்த வாகனப் பேரணியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் அவர்கள் தெரிவித்ததாவது:
மனிதநேயம் கொண்டவர்கள் இந்த எழுவர் விடுதலையை ஆதரிக்கின்றனர், சிலர் எதிர்க்கின்றனர். ஆதரிப்பவர்கள் தங்கள் ஆதரவை வெளிபடுத்தவும், எதிர்ப்பவர்களை கருணையோடு இதை பாருங்கள் என்று வலியுறுத்துவதற்காகவே இப்பேரணி நடைபெற்றது.
தம்பி பேரறிவாளனை விசாரணை என்று அழைத்துச்சென்று 25 ஆண்டுகள் ஆகின்றது. இப்போது இருக்கின்ற ஒரே வாய்ப்பு அரசியலமைப்பு சட்டம் 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி ஏழு பேரையும் விடுதலை செய்வது ஒன்றுதான். தமிழக அரசு ஏற்கனவே ஏழு பேர் விடுதலைக்கான முன்னெடுப்புகளை செய்திருக்கின்றது. எழுவர் விடுதலை குறித்து மத்திய அரசிடம் இருமுறை அம்மையார் ஜெயலலிதா கருத்து கேட்டிருக்கின்றார். மேலும் விடுதலை செய்வேன் என்றும் ஏற்கனவே கூறியிருக்கின்றார். அதனால், தமிழக அரசு தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.