சென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.

34

ராகுல் காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வரும் 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும்,தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்றும் அவரது கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிகழ்ச்சிக்கு பல்கலை அரங்கத்தை அனுமதிப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை பல்கலைக் கழகம் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனம் ஆகும்.ராகுல் காந்தி நிகழ்ச்சி நடைபெற்றால்,நிகழ்ச்சி தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஒட்டியும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வர்.காவல்துறையின் பலத்த கெடுபிடியும் பல்கலைக்கழகத்தில் இருக்கும்.இது அங்கு பயிலும் மாணவர்கள்,மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கும்.அவர்களின் அமைதியான கல்வி கற்கும் சூழலுக்கு தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும்.இதனை அனுமதிக்க முடியாது.மேலும் இதுவரை அங்கு எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றதில்லை.முதல்முறையாக ராகுல்காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் நிகழ்விற்கோ,ஆர்ப்பாட்டத்திற்கோ பொது இடங்களில் அனுமதி மறுக்கும் கருணாநிதியின் அரசும் கெடுபிடி செய்யும் காவல்துறையும் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் அனுமதி அளிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.இதனையும் மீறி ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்தால்,அதனைப்போல நாம் தமிழர் கட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு வரும் 30 ஆம் தேதி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.ராகுல் காந்திக்கு அனுமதி அளித்து எங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதியை நிர்வாகம் மறுத்தால் அனுமதி கோரி உயர்நீதிமன்றம் செல்வோம் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் மக்கள் நல பணிக்குழு சார்பாக சென்னை ஆர்க்காடு சாலையில் சாலை சீர்செய்யும் பணி நடைபெற்றது
அடுத்த செய்திஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பட்டுள்ளது