சுற்றறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனத்திற்கு

313

க.எண்: 2024050173

நாள்: 31.05.2024

சுற்றறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தல் – 2024
தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும்
வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனத்திற்கு

     நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் – 2024க்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் சூன் 04 அன்று நடைபெறவிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்குகள் சரியான முறையில் எண்ணப்படுகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளும் விதமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணுகை முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது 14 மேசைகள் கொண்ட ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் 1 தலைமை முகவர் மற்றும் 14 வாக்கு எண்ணுகை முகவர்களும் இருப்பதை தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் உறுதிசெய்யவேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

அதே போன்று நியமிக்கப்படும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று தங்கள் சட்டமன்றத் தொகுதிக்குரிய மாதிரி படிவங்களை தேவையான அளவு அச்சுப்படி (print) எடுத்துவைத்துக் கொள்ளவும்.

https://shorturl.at/Dmrmi

வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனிக்கவேண்டியவை,

1.வாக்குப் பதிவின்போது வாக்கக முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17Cல் உள்ளபடி வாக்கக எண், வாக்கக நிலையம், வாக்குப் பெட்டியின் கட்டுப்பாட்டுக் கருவி எண் (Control Unit ID), வாக்குப்பதிவுக் கருவி எண் (Balloting Unit ID), ஒப்புகைச்சீட்டு பெட்டி எண் (VVPAT ID), மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, கட்டுப்பாட்டுக் கருவி திறக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

  1. வாக்குப் பெட்டியில் முடிவுகள் காட்டப்படும் போது வாக்கு எண்ணுகை படிவத்தில் ஒவ்வொரு வாக்ககத்திலும் வேட்பாளர் வரிசை எண்வாரியாக அனைத்து வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளையும், நமது கட்சி வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகளையும் சரியாகக் குறித்துக்கொள்ளவேண்டும்.
  2. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் நமது கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும். அதேபோன்று மற்ற வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கையையும் சரிபார்க்க வேண்டும்.
  3. அனைத்துச் சுற்றுகளின் முடிவையும் சரிபார்த்து நமது கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கையையும், மற்ற வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கையையும் சரிபார்க்க வேண்டும்.
  4. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தலைமை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்களிடம் இருந்து தகவல்களைச் சரிபார்த்து ஆவணப்படுத்திடவேண்டும்.
  5. தொழில்நுட்பக் கோளாறுகள், சட்டத்திற்குப் புறம்பான விதிமீறல்கள், சட்ட-ஒழுங்கு சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையீட்டு உரிய தீர்வு காண வேண்டும். அதன்பிறகே அடுத்த சுற்று எண்ணிக்கைக்கு ஒப்புக்கொள்ளவேண்டும்.

மண்ணையும், மக்களையும் நம்பி உண்மையும், நேர்மையுமாக களத்தில் நின்ற நமக்கு மக்கள் செலுத்தியுள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றவை; அதனை முழுமையாக அறுவடை செய்ய வேண்டியது நம் அனைவரின் தலையாயக் கடமை என்பதை உணர்ந்து சிறப்பாகச் செயலாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் பிறந்தநாள் – சீமான் உறுதியேற்ப்பு!
அடுத்த செய்திபள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் காட்டுத்தீ: துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க சீமான் வலியுறுத்தல்!