கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை – தமிழன்னைக்குப் புதியதோர் மணிமகுடம்! – சீமான் வாழ்த்து

181

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை! – தமிழன்னைக்குப் புதியதோர் மணிமகுடம்

பழந்தமிழ் பண்பாடு போற்றும் மரபு செய்யுளானாலும்,
இளந்தமிழ் யுகத்தை மாற்றும் புதுக்கவிதையானாலும்,
மாணிக்கச் சொற்களெடுத்து,
மரகத வரிதொடுத்து,
தேனினும் இனிய பாக்களால்,
தமிழர்தம் மனத்தினை மயங்கச் செய்யும்
தன்னிகரற்ற தமிழ்ப்பெருங்கவி!

அன்னைத் தமிழருவி
அள்ளி அள்ளி பருக தந்து
உருக வைக்கும் பெருக வள்ளல்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அரசவை முற்றத்தில்…

கள்ளிகாட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் என்று
இலக்கியத்திற்கு இலக்கணமாய்
காலத்தில் நிலைபெற்ற
காவியப் படைப்புகள் வரிசையில்
விழாவெடுத்துச் சூடிக்கொள்ள
வெளிவரவிருக்கிறது மற்றுமொரு மணிமகுடம்;
‘மகா கவிதை’ எனும் கவிதை பீடம்!

தமிழை நேசிக்கவும் வாசிக்கவும் அறிந்த
நம் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய திருமுகம்
மகா கவிதை!

ஐம்பூதத்தையும் ஆய்ந்து தெளிந்து,
அதனை அறிவியல் தமிழ்கொண்டு பண்படுத்தி,
நம் அறிவு வியக்க ஐம்புலன்களுக்கும் விருந்து வைக்கக் காத்திருக்கும்
மகா கவிதையை
உலகத் தமிழ்ப்பேரினம் இருகரம் கூப்பி வரவேற்போம்!

கவிப்பேரரசு எந்தப்பெயரில் எழுதினாலும்
அவையெல்லாம் மகா கவிதையாயிற்றே;
மகா கவிதை என்ற பெயரிலேயே எழுதினால்
அது எப்படி இருக்குமோ? என்ற அளப்பரிய எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் முதல் வாசகனாய்…

எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு
எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

https://x.com/Seeman4TN/status/1742161010927214774?s=20

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்