பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை நந்தனம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

135

3010-2022 | பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – சென்னை நந்தனம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 30-10-2022 அன்று சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

 

பின்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள், “தமிழ் பேரினத்தின் பெருமைமிகு அடையாளமாக இருக்கிற எங்களுடைய ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று. உண்மையைப் பேசு, அதை உரக்கப் பேசு, உறுதியாகப் பேசு, அதை இறுதிவரை பேசு என்று எங்களைப் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகளுக்குக் கற்பித்தப் பெருந்தகை. மலர் மாலைக்குக் கழுத்தை நீட்டுவது போல மரணக் கயிற்றுக்கு எவன் துணிந்து கழுத்தை நீட்டுகிறானோ அவனே உண்மையான வீரன் என்று மானத்தமிழ் மக்களுக்குப் போதித்த மகத்தான பெருமகன் எங்கள் ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள். எதிர்காலத்தில், பாலை விற்பது போல தண்ணீரையும் போத்தலில் அடைத்து விற்பார்கள், மக்கள் விளைநிலங்களைக் கூறுபோட்டு வீட்டு மனைகளாக்கி விற்பார்கள், புறாக்கள் கூடுகட்டி வாழ்வது போல மக்கள் வீடு கட்டி வாழ்வார்கள் என்று முன்பே கணித்துக் கூறிய கால ஞானி எங்கள் பெருமைக்குரிய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள். அவருடைய நினைவைப் போற்றுவதில் வழிவழியே வருகிற வீரத்தமிழ், மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள் பெருமை அடைகிறோம். போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய எங்களுடைய ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு நாம் தமிழர் பிள்ளைகள் எங்களுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சீமான் ஆயர்கள், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார், ஆனால், இங்கு ஆளுநரை வைத்துக்கொண்டு பாஜக இரட்டை ஆட்சி நடத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய காவல் படை, சிபிசிஐடி, கியூ பிராஞ்ச் என எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எதற்கு கோவை எரிகாற்று உருளை வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏவிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்? அது மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பது என்றாகிவிடாதா? கல்வி, மருத்துவப் படிப்பு, மின் உற்பத்தி என்று எல்லாவற்றையும் மாநில உரிமைகளில் இருந்து பறிகொடுத்துவிட்டார்கள். இப்போது எது ஒன்றும் மாநில அரசிடம் இல்லை. பிறகு முதல்வர் அவர்கள் மாநில சுயாட்சி என்று பேச என்ன இருக்கிறது?” என்று கூறினார்.

மேற்கொண்டு, “இங்கு வலுக்கட்டாயமாக ஒரே நாடு, ஒரே மொழி என்று திணிக்க நினைக்கிறார்கள். அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாடு, பல மொழிகளைப் பேசக்கூடிய தேசிய இன மக்கள் வாழக்கூடிய ஒரு ஐக்கியம் தான். அதைப் புரிந்து கொள்ளாது ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்து கொண்டிருப்பது பெரும் ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இதனால் நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டி, நாட்டைக் கூறுபோட நினைப்பது இவர்கள் தானே தவிர வேறுயாரும் அல்லர். இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிவார்ந்த தலைவர் என்று நினைத்தேன். ஆனால், ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்குப் பதிலாக இலட்சுமி படத்தைப் போட வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. முதலில் ரூபாய் நோட்டில் அண்ணல் காந்தி படம் இருப்பதே வருத்தமாகத் தான் இருக்கிறது. அதற்கு காரணம், ஊழல் இலஞ்சத்திற்கு எதிராக இருந்த காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் இலஞ்சமாக கொடுக்கப்படுகிறது. மதுவிற்கு எதிராக இருந்த காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் படம் போட்ட நோட்டு தான் மது வாங்குவதற்கும் கொடுக்கப்படுகிறது. விபச்சார விடுதிகளில் அதே காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. கொலை செய்பவனுக்கும் காந்தி முகம் பதித்த ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. அந்த ரூபாய் நோட்டில் நீங்கள் சாமியாக வணங்குகிற லட்சுமி படம் போட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். கொலை செய்பவனிடம், மது விற்பனையாளரிடம், ஊழல் செய்பவனிடமும், லஞ்சம் வாங்குபவனிடமும் இலட்சுமி தெய்வம் துணை செல்ல விடுவதா? இந்த சிந்தனையே பெரும் மடமை” என்று கூறினார்.

முந்தைய செய்திதெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்
அடுத்த செய்திதமிழக வரலாற்று அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்