‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு! – மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு பொருளாதார உதவி நல்குக!

842

உறவுகள் அனைவருக்கும் அன்புநிறைந்த வணக்கம்!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலகின் மிக மூத்த இனமெனத் திகழ்வது நமது தமிழ்த்தேசிய இனம். தமிழ்நாடு, தமிழீழம் என இரண்டு வரலாற்று வழிப்பட்டத்தாயகங்களை கொண்ட முதுபெரும் இனக்கூட்டத்தினர் தமிழர்கள் நாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, பண்டையக்காலத்திலேயே மொழியியல் அறிவோடும், புலமையோடும் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் நாம். இவ்வுலகு நாகரீகமே அடைந்திடாத காலக்கட்டத்தில், அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்திடாத அக்காலப்பகுதியில் ஓடுகிற நீரைத் தடுத்து குறுக்கே கல்லணை எனும் அணை கட்டி, உலகினரை வியக்க வைத்த மரபைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் நாம். சொல்ல சொல்ல விரிவடைந்துகொண்டே செல்லுமளவுக்கு அளப்பெரும் பெருமைகளையும், எண்ணிலடங்கா சிறப்புகளையும் கொண்ட தொல்குடியினர் தமிழர்கள் நாம். இவ்வாறு வரலாற்றுப்பெருமைகள் பலவற்றைக் கொண்டு உலகின் மிக மூத்த இனமாகவும், மற்ற இனக்கூட்டத்தினருக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் முன்னோடிச்சமூகமாகவும் விளங்கிய தமிழ்ப்பேரினம், பல்வேறு படையெடுப்புகளினாலும், உள்முரணால் விளைந்திட்டத் தன்னினப்பகைகளாலும், தொலைநோக்கற்றச்செயல்பாடுகளாலும், கூட்டுணர்வற்றத்தன்மையினாலும் பிளந்து, பிரிந்து, வீழ்ந்தது. விளைவு, மன்னராட்சி, மக்களாட்சி என இரு மாறுபட்ட அரசதிகார முறைகளிலும், வேற்றினத்தாரிடமே பல ஆண்டுகளாக கீழ்படிந்து நிற்கிறோம். அவர்களின் ஆளுகையின் கீழ் மொழி சிதைந்து, இனம் பிளந்து, உரிமைகளை இழந்து, அடிமை நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

தமிழர்களது அடிமைச்சங்கிலியை முறிக்க, மக்களையே படையாகத் திரட்டி, அவர்களைக் கொண்டே இன விடுதலைக்கான முப்படைகளையும் கொண்ட ஒரு தேசிய இன இராணுவத்தைக் கட்டியெழுப்பி, அதன் மூலம் தனது நிலப்பகுதியையும், மக்களையும் தற்காத்து, தன்னில் தாங்கி நிற்கும் ஒரு சோசலிய நாட்டை நிறுவி, அதனுள் அத்தனைக்கட்டமைப்புகளை அமைத்து உலகிற்கே முன்னுதாரணமான நாட்டைப் படைத்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள். அறம் சார்ந்த தமிழர்களின் வீரத்தை களத்தில் எதிர்கொள்ள முடியாத சிங்கள இனவாத அரசு, அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில், நயவஞ்சக நகர்வுகளை இந்திய வல்லாதிக்கத்தின் துணைகொண்டு நகர்த்தி, தமிழர்களை சொந்த மண்ணிலேயே அழித்தொழிக்கும் வேலைகளைக் கடந்த 2003ம் ஆண்டு முதல் செய்யத்தொடங்கியது. விளைவாக, 2009 ஆம் ஆண்டு ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்தது. இதுவரை வரலாறு பார்க்காத உதிரக்காட்சிகள் அவை‌. ஒரு நாட்டுக்கும், பிறிதொரு நாட்டுக்கும் இடையே போர் நடக்கும்போது பயன்படுத்தக்கூடாதென உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வீசி, ஆயுதங்களைக்கொண்டு, துள்ளத்துடிக்க இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுகுவித்து, தமிழினத்தை இரத்தச்சகதியிலே தள்ளியது சிங்கள அரசப்பயங்கரவாதம். தங்கள் உயிரையே ஆயுதமாக ஏந்தி, மக்களைக் காக்கக் களத்தில் நின்று, உயிரீகம் செய்திட்டார்கள் நம் மாவீரர் தெய்வங்கள்.

13 ஆண்டுகள் கடந்து விட்டப்பிறகும்கூட காற்றில் கரைந்த நம் இன சொந்தங்களின் மூச்சுக்காற்றை இன்னும் உணர முடிகிறது. தாய் நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட நம் தமிழீழச்சொந்தங்களின் உதிர வாடை இன்னும் நம் நினைவில் நின்று நம்மைப் போராடத்தூண்டுகிறது. இனவெறியால் நிகழ்த்தப்பட்ட நம்மினப்படுகொலையை ஒருநாளும் கடந்துபோக முடியாது. நம்மினத்திற்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மறந்துவிட்டுச் செல்ல முடியாது. நம்மை நம்பியே, அந்நிலத்தில் புலிமறவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். கடைசி நம்பிக்கையென நம்மையே திசைகாட்டிச் சென்றிருக்கிறார்கள். வீரத்தமிழினம் வீழ்ந்துவிடாது; மானத்தமிழினம் மாண்டுவிடாது எனக் காட்டுவதற்கு நாம் மீண்டெழ வேண்டும்; விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே என உலகுக்கு உரைக்க வேண்டும். எல்லாம் முடிந்துவிட்டதென சிங்கள இனவெறிக்கூட்டம் எக்காளமிட்டு சிரித்து முடிப்பதற்குள், நாம் இன்னொரு தாய் நிலத்திலே இன்னொரு வடிவிலே எழுந்து நிற்கிறோம். இறக்கப்பட்டப் புலிக்கொடியை ஏந்தி நிற்கிறோம். ‘புலிகளின் தாகம்! தமிழீழத்தாயகம்’ என்பதை, ‘தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!’ என மாற்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்.

மே 18! நம்மினம் அழித்தொழிக்கப்பட்ட நாள்! நம்மினப்பகை முடிக்க தமிழர்கள் ஒவ்வொருவரும் சூளுரைக்க வேண்டியப் பேரெழுச்சி நாள்! அன்னைத்தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக தமிழ்ப்பேரினம் ஆர்த்தெழ வேண்டிய பெருநாள்!

இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வினை, கடந்த இரண்டாண்டுகளாக பொதுவெளியில் நடத்த இயலாத சூழல் நிலவியதால் அரங்கினுள்ளும், இணையவழியின் வாயிலாகவும் நடத்தி வந்தோம். தற்போது அதனை பேரெழுச்சிமிக்க இன மீட்பு மாநாடாக நாம் தமிழர் கட்சி நடத்தவிருப்பதால் அதற்கு இனமாகவும், பணமாகவும் உறவுகளையே நாடி நிற்கிறோம். ‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது துரோகமாகும். அந்நெருக்கடியினை முழுத்தேசிய இனமே பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க, இந்நிகழ்வுக்கான பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியது இனமானத் தமிழர்களின் தார்மீகக்கடமையாகும்.

இன எழுச்சி நிகழ்வை திட்டமிட்டப்படி பெருந்திரள் மாநாடாக நடத்த பெரும் பொருளாதாரம் தேவைப்படுவதால், ஒவ்வொரு தமிழரும் தங்களது இனமானக்கடமையுணர்ந்து, தங்களால் இயன்ற பொருளாதார உதவியை நல்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நிதி அளிக்க: https://donate.naamtamilar.org/may-18-2022.html

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசெங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா