சுற்றறிக்கை: சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாக!

799

க.எண்: 2022040179
நாள்: 23.04.2022

சுற்றறிக்கை: சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாக!

நாளை ஏப்ரல் 24 அன்று தமிழகமெங்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் தமிழர் உறவுகள் அரசியலமைப்பின் ஒரு அங்கமாக விளங்கும் கிராமசபைக் கூட்டங்களில் அவசியம் பங்கேற்று தத்தம் கிராமப்புற மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் குரல் கொடுக்க வேண்டுமென தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதற்கு ஏற்ப நாம் தமிழர் உறவுகளும் தங்களது கிராமங்களில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அந்தவகையில், நாளை (ஏப்ரல் 24) நடைபெறவிருக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இதற்கான செயற்திட்டத்தை கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கவேண்டும் எனவும் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது, மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராகவும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு மையம், கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்த கோபுரம், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகவும், கிராமப்புற ஏழை மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவை அழித்து அவர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய ‘நீட்’ தேர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தியும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இந்தி, சமஸ்கிருத மொழிகளை மறைமுகமாகத் திணிக்க முயலும் ஒன்றிய அரசிற்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான கண்டனம் தெரிவித்தும், நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட சட்டங்களைக் கடுமையாக்கவும், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைந்து நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தியும், கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்களை முன்மொழிந்து, நிறைவேற்ற செய்ய வேண்டும் எனவும் அதன் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அழுத்தமும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கிராம ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள், உயர் குடிநீர் தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள், மின் கம்பங்கள், மின் விளக்குகள், சாக்கடைக் கால்வாய்கள், பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த விவரங்கள், ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், தொகுப்பு வீடுகள் திட்டம், குடிமராமத்துப் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நெல் கொள்முதல் நிலையம், இ-சேவை மையம், நியாவிலைக்கடை, உர-தானிய கிடங்குகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிறை, குறைகள் என்ன? தொழில் வரி, தண்ணீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி பற்றிய ஐயங்கள், ஊராட்சியின் மொத்த வரவு, செலவு எவ்வளவு? போன்ற கிராமப்புற உட்கட்டமைப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடிநீர், சாலை, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வினாக்களை கிராமசபைக் கூட்டத்தில் எழுப்புவதன் மூலம் நமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் தமிழர் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோடை கால தண்ணீர் பந்தல்
அடுத்த செய்திஅறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்