திருவண்ணாமலை வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

590

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்கள் மீது சாதிவெறி கொண்டு தொடுக்கப்பட்ட கோரத்தாக்குதலைம், வன்முறை வெறியாட்டத்தையும் கேள்வியுற்று பெரும் அதிர்ச்சியடைந்தேன். பொதுப்பாதையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் பிணத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களது உடைமைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் கொடும் தாக்குதல் தொடுத்திருக்கும் சாதிவெறியர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சாதி எனும் மனநோய் பிடித்து, சகமனிதரைத் தாழ்த்தி, ஒடுக்கி, அடக்கி ஆள முற்படுவதும், அவர்களது உரிமைகளை மறுத்து, உடைமைகளைப் பறித்து சுகம் காணுவதுமான கொடுங்கோல் போக்குகள் மானுடத்திற்கே விரோதமான ஈவிரக்கமற்ற பெரும் அநீதியாகும். சாதி ஆதிக்கத்தையும், அதன்மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைத்தாக்குதல்களையும் எதன்பொருட்டும் ஏற்க முடியாது. இருபத்திவோராம் நூற்றாண்டிலும் சாதிவெறிப் பிடித்து, பொதுவீதியில் நடக்கவும், பிணத்தை பொதுப்பாதை வழியாக எடுத்துச்சென்று அடக்கச்செய்யவுமென சம உரிமையும், சமத்துவமும் கேட்டுப்போராட வேண்டிய இழிநிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது. இவற்றையெல்லாம் எதற்காகவும் சகித்துக்கொள்ளாது, அவற்றிற்கெதிராகத் தீவிர சட்டநடவடிக்கைகளை எடுத்து, சமூக ஒற்றுமையையும், சமதர்மத்தையும் நிலைநாட்ட வேண்டியது ஓர் அரசின் தலையாயக்கடமையாகும்.

ஆகவே, வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்தி, உரிமைகளை மறுத்த சாதிவெறியர்களைக் கடும் சட்ட நடவடிக்கைள் மூலம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாதப் பின்புலத்தில் வந்த பாஜக, விடுதலைப்போராட்ட வீரர்களைப் புறக்கணிப்பு செய்வதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தி, அடக்கியாள முற்படுவதா? ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜக அரசுக்கு சீமான் கண்டனம்