‘நீட்’ விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டுவது மக்களை ஏமாற்றும் இழிசெயல்! – சீமான் கண்டனம்

127

செய்திக்குறிப்பு: ‘நீட்’ விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டுவது மக்களை ஏமாற்றும் இழிசெயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொடுங்கோன்மையைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வை முற்றாக ரத்து செய்யக்கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாநிலம் முழுவதும் பதாகை ஏந்தும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் . இன்று 16-09-2020 அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாணவர் பாசறை நிர்வாகிகளுடன் இணைந்து பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். முன்னதாக, காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் தன்னுயிரை ஈகம் செய்த காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிற பேராசிரியர்கள் ஏற்கனவே இருந்த கல்வி முறையில் பயின்று வந்தவர்கள்தான். அவர்கள் ‘நீட்’ தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்களில்லை. ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு நடத்தப்படுகிற பாடமும் பழைய முறைதான். பாடமும் பழைய முறைதான்; பாடம் நடத்துகிற பேராசிரியர்களும் பழைய முறையில் பயின்று வந்தவர்கள்தான் எனும்போது ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவர்களின் தரம் மேம்பட்டுவிடும் என்பதை அறிவார்ந்த சமூகம் எப்படி ஏற்கிறது?

சிறுவயதிலேயே மருத்துவராக வேண்டுமெனும் கனவோடு இருக்கிற நமது பிள்ளைகள் அதற்காகவே உழைத்து 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். தங்கை அனிதாவும் அதேபோல அதிக மதிப்பெண்களைப் பெற்றவள்தான். 1200 மதிப்பெண்களுக்கு 1,195 வரை மதிப்பெண்கள் பெற்ற பிள்ளைகள் ‘நீட்’ தேர்வில் தோல்வியுற்றார்கள் என்பதற்காக நிராகரிக்கப்படுகிறார்கள். ‘நீட்’ தேர்வில் எல்லையில் மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெற்றவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி பெறுகிறார்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்? கடந்த முறை ஆள் மாறாட்டத்தின் மூலம் எண்ணற்றவர்கள் ‘நீட்’ தேர்வின் வழியே உள்நுழைந்துவிட்டார்கள். வடநாட்டில் தேர்வரே தேர்வெழுதுகிற மாணவர்களுக்கு முறைகேடாக உதவுவதைப் பார்க்கிறோம்; அப்படியென்றால், தகுதியற்ற போலி மருத்துவர்களை ‘நீட்’ தேர்வின் மூலமே உருவாக்குகிறார்கள் என்றுதான் பொருள்.

தேர்வெழுதும்போது நல்ல திறந்த மனநிலையில் இருக்க வேண்டும் என்பதால்தான் பெரியவர்களை வணங்கி வாழ்த்துகள் பெற்று, வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள் மாணவப்பிள்ளைகள். ஆனால், தேர்வெழுதச் செல்லும்போது மூக்குத்தியைக் கழற்றச் சொல்லி, காதணியைக் கழற்றச்சொல்லி, மேலாடையைக் கத்தரித்து, தாலியைக் கழற்றச் சொல்லித் தேர்வறைக்குள் அனுப்பினால் அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? எப்படித் தேர்வை எதிர்கொள்வார்கள்? காதணிக்குள்ளும், மூக்குத்திக்குள்ளும் ஒளித்து வைத்து முறைகேடு செய்து தேர்வெழுத முடியும் என நம்புகிற இந்நாடு, வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது என்பது எவ்வளவு வேடிக்கையானது?

12 ஆம் வகுப்பில் பெறுகிற மதிப்பெண்கள் பயனற்றதென்றால், எதற்குப் பள்ளிக்கல்வித்துறை மதிப்பெண்களை நிர்ணயம் செய்கிறது? இப்பாட முறையையே முழுவதுமாக அகற்றிவிட்டு நேரடியாக ‘நீட்’டுக்கான பாடத்தையே நடத்திவிடலாமே? ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்து, அதன்மூலம் தனியார் பயிற்சி நிலையங்கள் இலட்சக்கணக்கில் கொள்ளை இலாபம் ஈட்டி, கல்வியை மேலும் வணிகமாக்கத்தான் இம்முயற்சிகள் உதவுகிறதே ஒழிய, கல்வியின் தரத்தைத் துளியளவும் தரம் உயர்த்தவில்லை என்பதுதான் உண்மை. கல்வி, மருத்துவத்தைத் தனியார் முதலாளிகளிடம் முழுவதுமாகத் தாரைவார்த்துவிட்டு கல்வியைத் தரப்படுத்துகிறோம் என்று கூறுவது கேலிக்கூத்து. 12ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியாது இறந்துபோகிற நிலையில்தான் தற்காலத்தில் நம் பிள்ளைகளின் மனவலிமை இருக்கிறது. இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைத்தால் கொத்துக்கொத்தாக நம் பிஞ்சுப்பிள்ளைகள் கருகி உதிர்ந்துவிடுவார்கள்.

‘நீட்’ தேர்வின் மூலம் தான் மருத்துவர்களைத் தரப்படுத்த முடியுமென்றால், ஏற்கனவே ‘நீட்’ தேர்வெழுதாது மருத்துவரான மருத்துவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரே நாளில் பணம் செல்லாது என்று அறிவித்தது போல, அவர்கள் மருத்துவரானது செல்லாது என்று அறிவிப்பீர்களா? அறிவிக்க முடியுமா? எல்லா மருத்துவர்களையும் ஒரே நாளில் தகுதியிழப்புச் செய்து வெளியேற்றிவிடுவார்களா? அந்த மருத்துவர்கள் தரமானவர்களென்றால், அதே முறையில் இன்றைக்குப் படிக்கிற பிள்ளைகள் மட்டும் எப்படித் தகுதியற்றவர்களாக ஆவார்கள்?

இந்த ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரசு. உடன்நின்றது திமுக. விரும்பிய மாநிலங்களுக்கு விலக்கு அளித்தோம் என்கிறார்கள். இதே போலத்தான், இந்தியையும் கொண்டு வந்தார்கள். இன்றைக்குக் கட்டாயமாக்க முனைகிறார்கள். ‘நீட்’டைக் கொண்டு வந்தால் அதனை வருங்காலத்தில் கட்டாயமாக்குவார்கள் என்கிற தொலைநோக்குப்பார்வை ஏன் இவர்களுக்கு வரவில்லை? அன்றைக்கு ‘நீட்’ தேர்வைத் தொடங்கி வைத்துவிட்டு, இப்போது போராடுகிறோமென்றால், அது ஏமாற்று இல்லையா? திமுகக் கூட்டணியிலுள்ள காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ‘நீட்’ தேர்வை வரவேற்கிறேன் என்கிறார். அதனை எப்படிப் பார்க்கிறது திமுக? இதே போலத்தான், எல்லாவற்றிலும் இரட்டை நிலைப்பாடு. ராகுல் காந்தி ‘நீட்’ தேர்வெழுதுகிற மாணவர்களுக்கு வாழ்த்துதான் சொல்கிறார். ‘நீட்’டை ஒழிப்பேன் என்று ஒருபோதும் கூறவில்லை. அம்மையார் ஜெயலலிதா ‘நீட்’ தேர்விலிருந்து கால விலக்குப் பெற்றுக்கொடுத்தார்கள். அதனை இந்த அரசு செய்யத் தவறிவிட்டது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறபோது அதனை வலிமையாக எதிர்கொண்டு சட்டப்போராட்டம் செய்யக்கூடத் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. இத்தனை உயிர்களை இழந்து தவிக்கும் நிலையிலும், திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றிக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் இழிசெயல் என்று சீமான் கூறியுள்ளார்.

மேலும் தமிழகமெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மாணவர் பாசறையினர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நீட் தேர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #BanNEETSaveStudents என்ற குறிச்சொல்லுடன் இணைத்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் (Twitter) இக்குறிச்சொல் இன்று அதிகம் பகிரப்படுபவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

[WRGF id=103330]


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திவிக்னேசுவிற்கு வீரவணக்கம் – திரு.வி.க நகர் தொகுதி