செய்திக்குறிப்பு: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி | நாம் தமிழர் கட்சி
நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மலைக் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 15-08-2019 அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள குருத்துகுளி, கப்பதொரை, மு.பாலாடா, கல்லகொரை ஆடா, வினோபஜ் நகர், இத்தலார் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று 1608-2019 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி (அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி முகாம்), சேரம்பாடி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முகாம் ), எருமேடு, மலவஞ்சேரம்பாடி , நடுவட்டம் (அரசு மாணவர் விடுதி முகாம்) உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அரிசி, பருப்பு, பிஸ்கட், ரொட்டி, கொசுவர்த்தி, போர்வை, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.