சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு – சிறை

104

கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டையில் செயற்பட்டு வந்த மணல் குவாரி கடந்த வருடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில் ‌சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கால் இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் சரவணன், அழகுமணி மற்றும் பேராசிரியர் இரவிச்சந்திரன் அடங்கிய குழு ஆய்வு செய்து ஆய்வறிக்கையில் இது சட்டத்திற்குப் புறம்பான மணல்குவாரிகளை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த மணல் குவாரி சட்டத்திற்குப் புறம்பாக செயற்படுவது குறித்து கடந்த 09-10-2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகும் மணல்குவாரி தொடர்ந்து செயற்படுவது குறித்து குளித்தலை கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகும் எவரிடமும் சரியான விளக்கம் இல்லாததால் மணத்தட்டையில் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படும் மணல்குவாரி மற்றும் மணல் கிடங்கை இன்று (12-10-2018) காலையில் முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, காவிரி பாதுகாப்பு இயக்கம், மார்க்ஸிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் கைது செய்து மாலை வரை அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் அனைவரின் மீதும் 143,341,353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் நேர் நிறுத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் விவரம்:

1. இரமேசு இளஞ்செழியன்
2. சீனிபிரகாசு
3. சுந்தரேசன்
4. பாசுகரன்
5. சரவணனன்
6. இரமேசு
7. லோகேசு
8. குமரேசன்
9. ஆரோக்கியசாமி
10. பாபு
11. விசய்
12. பிரபு
13. மதுபாலா
14. இராசேசுவரி (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்)

மக்கள் பிரச்சினைக்காகப் போராடி சிறைப்பட்டுள்ள அனைவரையும் சிறைமீட்கும் பணியில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை விரைந்து செயற்பட்டு வருகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு