மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு திமுக அரசே காரணம்! – சீமான் கண்டனம்

322

மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு திமுக அரசே காரணம்! – சீமான் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணற் கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியது.

மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அதிகாரியைக் கொலை செய்த நிகழ்வு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பதே முற்றாக சீரழிந்துள்ளதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து அதன் காரணமாக கொலைகள், கொள்ளைகள், ஆணவப்படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவும் சூழலில், பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் குறித்து ஒருபுறம் சட்டமன்றத்தில் விளக்கமளித்துவிட்டு, மறுபுறம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சட்டம்-ஒழுங்கு மிகச்சிறப்பாக இருப்பதாக அதே சட்டமன்றத்திலேயே கூறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் தற்போது பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் நடைபெற்றுள்ள படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறார்?

அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முறைகேடான கனிமவளக் கொள்ளையை ஆதரித்து கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் திமுக அரசின் மண்ணின் வளத்திற்கு எதிரான ஆட்சி நிர்வாகமே, மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற அரசு அதிகாரியை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யுமளவிற்கு மணற்கொள்ளையர்களுக்குத் துணிச்சலைத் தந்துள்ளது.

ஆகவே, திமுக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மணல் மற்றும் மலை கனிமங்களைக் கடத்தும் வளக்கொள்ளையர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து கனிமவளக்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை கொலைசெய்த கொடூரர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாள் – தூத்துக்குடியில் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திகீ.வ குப்பம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா நடைபெற்றது