வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்! – சீமான் கோரிக்கை

29

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி

கொரோனா கொடுந்தொற்றுக்காலத்தில் வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் வேலை இழந்து, உணவிற்கும், உறைவிடத்திற்கும் அல்லலற்பட்டுத் தாங்கொணாத் துயரத்தை அனுபவித்து வரும் வேளையில், நாடு திரும்புவதற்கு முன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையைக் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதன்று! வெளி நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக அங்கு அல்லற்படும் தமிழர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் மிகப்பெரிய சுணக்கம் நிலவுவது மட்டுமன்றி பெரும் புறக்கணிப்பும் நிகழ்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் சூழலில், அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழகம் திரும்புவதற்குத் தேவையான விமானப் பயணச்சீட்டு வாங்குவதற்குக் கூட இயலாத நிலையில், தன்மானத்தை அடகு வைத்து மற்றவர்களிடம் கையேந்தியும், நண்பர்கள் மற்றும் அறிந்தவர்கள் வாயிலாகவும் உதவிகளைப் பெற்றும், பல்வேறு இன்னலைகளைக் கடந்து இரண்டு மடங்கு விமானக் கட்டணத்தைச் செலுத்தியே தாயகம் திரும்பு முயல்கின்றனர். அவ்வாறு பெருந்துன்பத் துயரங்களுக்கு இடையே விமான நிலையம் செல்லும் தமிழகப் பயணிகளுக்கு, 96 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR, முன் பரிசோதனை முடிவு சான்றிதழ் அவசியம் தேவை என்ற அறிவிப்பு அத்தகைய எளிய மனிதர்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் 29-09-2020 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவிற்குத் திரும்பும் பயணிகள் தாங்கள் புறப்படும் முன்பே RT-PCR பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தாயகம் திரும்பியவுடன் தாங்கள் இறங்கும் விமான நிலையங்களிலேயே அறிகுறிகளுக்கேற்ப, பரிசோதனை செய்து, அந்த முடிவுகளுக்கேற்ப தங்களைச் சுய தனிமைப்படுத்திக்கொள்வதோ அல்லது மருத்துவமனைக்குச் செல்வதோ அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் பயணத்திற்கு முன்பே RT-PCR, முடிவு அவசியம் என்ற நடைமுறை முற்றிலும் முரணாகவும், தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்குப் புதிய சிக்கலையும் ஏற்படுத்தி அலைக்கழிக்கும் போக்காக அமைந்துள்ளது.

மேலும், விமானப் பயணசீட்டுக் கட்டணத்திற்கே வழியின்றிப் பெருஞ்சோதனைகளைக் கடந்து தாயகம் திரும்ப முயலும் தமிழர்களால், வெளிநாடுகளில் பெரும் கட்டணம் செலுத்தி RT-PCR பரிசோதனைகளை எப்படிச் செய்துகொள்ள முடியும்? மற்ற மாநிலங்களில் இல்லாத நடைமுறையாக தமிழகம் வர விரும்புவோர்க்கு மட்டும் ஏன் இந்தக் கட்டாய முன் பரிசோதனை சான்றிதழ் நிபந்தனை என்ற தமிழர்களின் கேள்வி மிக நியாயமானது. இத்தகையக் கட்டாய முன் பரிசோதனை அறிவிப்பு ஏற்கனவே பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து, நிலைகுலைந்து தமிழகம் திரும்பும் தமிழர்களுக்குப் பெரும் சுமையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து மத்திய அரசிடம் உடனடியாக வலியுறுத்தி மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திற்கு வர விரும்பும் பயணிகளுக்கும் முன்பரிசோதனை அறிக்கை தேவையில்லை என்ற நடைமுறையைச் செயல்படுத்திட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவேப்பனகள்ளி – புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்