கிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவுறுத்தல்

60

கிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவுறுத்தல் | க.எண்: 2019060094 | நாள்: 24.06.2019

தமிழகத்தில் கடந்த மே-01 அன்று மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளின்படி நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனே நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கடந்த 18ஆம் தேதியன்று தமிழகமெங்குமுள்ள நாம் தமிழர் கட்சியின் மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தற்போது வருகிற 28ஆம் தேதியன்று தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் தமிழர் உறவுகள் தத்தம் கிராமங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அவசியம் பங்கேற்று கிராமப்புற மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு மையம், கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்தக் கோபுரம், எட்டுவழிச் சாலை, தாமிர ஆலை போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகக் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்து, அவற்றின் வாயிலாக அரசுக்கு அழுத்தமும், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புற உட்கட்டமைப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடிநீர், சாலை, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் தமிழர் உறவுகளை அறிவுறுத்துகிறேன்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்\கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் \பூம்புகார் சட்டமன்ற தொகுதி