திருவாரூர் இடைத்தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது

762

வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் போட்டியிடுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது பற்றிய சிறுகுறிப்பு:

தமிழ் முழக்கம்சாகுல் அமீது (வயது 59). இவர் பிறந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூராகும். 1974 – 82 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர் என்பதால் இவருக்கு, திருவாரூர் நன்கு அறிமுகம். தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த தமிழ் முழக்கம் வெல்லும்  இதழைப் பல ஆண்டுகளாக நடத்தியவர்.

ஈழத்தின் மீதும் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, 2002ஆம் ஆண்டு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த. நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் வதைப்பட்டார். அதே ஆண்டின் தொடக்கத்தில் ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னையொரு தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டு உறுதியாக களத்தில் நின்றதனால் இவரது தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார். தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் பாரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் பேராளுமை.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.

நாம் தமிழர் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரானப் போராட்டங்கள் உள்ளிட்ட மண்ணின் உரிமைகளுக்கானப் போராட்டங்களிலும் தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சியை முன்னின்று நடத்தியவர். மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று கட்சி கட்டமைப்புப் பணிகளில் திறம்பட செயலாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி நாம் தமிழர் கட்சிக் கொள்கைகளைப் பரப்பியவர்.

அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர். 

தமிழ்த்தேசிய அரசியல் மீதும், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீதும் அளவற்ற ஈடுபாடும், தெளிவானப் பார்வையும் கொண்டவர் சாகுல் அமீது. அந்த வகையில் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு மிகச்சரியான தேர்வாகும்.

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களே! உங்கள் மதிப்பிற்குரிய வாக்குகளை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் செலுத்தி அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்!

இந்த வாக்கு நம் மண் காக்கும்! மானம் காக்கும்! நாளைய தலைமுறையைக் காக்கும்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்-காஞ்சிபுரம்
அடுத்த செய்திபாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்