யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்

50

யார் சமூகவிரோதிகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்,

யார் அந்தச் சமூகவிரோதிகள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,

எங்கள் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள், தடுக்கப்போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று. கண்முன்னே எங்கள் அக்கா-தங்கைகளை வன்புணர்வு செய்து படுகொலை செய்தவர்கள், அதைத் தடுக்கப் போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள், வன்முறையாளர்கள் என்று. எங்கள் தலைக்கு மேலே குண்டுகள் வீசிக் கொன்றவர்கள், நெஞ்சைக் குறிபார்த்து சுட்டுக் கொன்றவர்களும் எங்களைச் சொல்கிறார்கள் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று. அப்படியானால் இந்தப் பயங்கரவாதமும் இந்தச் சமூகவிரோதமும் எவ்வளவு புனிதமானது பாருங்கள் என்கிறான் ஒரு கவிஞன் அதுபோல் தான் இருக்கிறது இவர்கள் சொல்வதும். இன்று மருத்துவமனையில் ரசிகர்களைக் கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படபிடிப்பா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா? துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்? இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார்,
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? என்று அடையாளம் காட்டுவீர்களா? எல்லாம் தெரிந்த திரு.ரஜினி அவர்களே!

போராடும் மக்களைச் சமூகவிரோதிகள், விசமிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது; நஞ்சானது! இவ்வாறு பேசுபவர்கள் தான் விசமிகள். நான்கு வயது பையனும் 5 வயது பொண்ணும் போராட்டக்களத்தில் நின்று இது மண்ணுக்கான போராட்டம்; இது மக்களுக்கான போராட்டம் என்று முழங்க ஊர் மக்களும் அதே முழக்கத்தைச் சொல்லி போராடிய காணொளிகள் உலகம் முழுவதும் பரவியதே, அந்தப் பச்சிளம் பிள்ளைகள் தான் சமூகவிரோதிகளா? அப்போராட்டத்தில் அதிகாரமற்ற, ஆயுதமற்ற மக்கள் அணி அணியாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனக் குடும்பத்தோடு பங்கேற்றனர். கலவரத்தைத் தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையுமா கூட்டிக்கொண்டு வருவார்கள்? இதெல்லாம் போராடுகிற மக்களை ஊனப்படுத்திக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகிற ஒரு கொடுஞ்சொல் தான் சமூகவிரோதிகள் என்றழைப்பது.

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் நாட்டில் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம். இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டு பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாகச் செய்தியில்லை என்கிறார் ஈழத்து பாவேந்தர் புதுவை இரத்தினதுரை. அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது? நாங்கள் யாரும் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலம், வளம், காற்று, நீர் இவற்றை மாசுபடுத்தும் தொழில்வளர்ச்சி தேவையா என்கிறோம். குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க எதற்காக மறுத்தார்கள்? காவிரிப்படுகையில் எடுப்பது போன்று கங்கைப் படுகையில் மீத்தேன் எடுக்காதது ஏன்? நாடு முழுவதும் எத்தனையோ மலைகள் இருந்தும் நியுட்ரினோ ஆய்வுக்குத் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வேண்டுமா? எங்கள் இனம் மட்டும் ஏன் குறிவைத்து வேட்டையாடப்படுகிறது. தொழில்வளர்ச்சி குறித்துப் பேசும் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா? அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

போராடும் மக்களைப் பொதுவாகச் சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ரஜினிகாந்த் தான் சொல்கிறார் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே இல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன? முன்னெடுத்த போராட்டங்கள் எத்தனை?

முதல் நாள் போராட்டம் தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை திரு.ரஜினிகாந்த் அவர்களே! 100 நாள் போராடி, பல உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தம் சிந்தி, தடியடியில் காயம்பட்டு, சிறைபட்டுக் கண்ணீர் சிந்திய பிறகே அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே அரசு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏன் ஏற்படுகிறது. போராட்டம் என்பது மக்களின் விருப்பமல்ல; அதிகாரத்தின் திணிப்பு! நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மக்கள் பிழைப்பை விட்டுவிட்டு ஓராண்டுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருகின்றனர்.

மக்களைப் போராட தூண்டுகிறார்கள் என்கிறாரே ரஜினி..?

கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்! என்கிறார் அண்ணல் அம்பேத்கர். நாங்கள் கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! என்கிறோம். மக்களுக்குக் கற்பிக்க வேண்டியது தானே கல்வி; கற்றதினால் ஆன பயன் என்ன? கற்றவை பற்றவைக்கத்தானே? தீயவை தீவைக்கத்தானே! மக்களுக்கு எது சரியானது என்பதைக் கற்பிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.
பணமதிப்பிழப்பின் போது மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க முடிந்த உங்களால் அது தோல்வி திட்டம் என்று உணர்ந்த பிறகும் வாய்திறக்க மறுப்பதேன்? தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா? சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற திரு.ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா? காவலர்கள் மீது மக்கள் தாக்கியது தவறுதான்; ஆனால் அதேவேளையில் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏன் வலியுறுத்த மறுக்கிறீர்கள் திரு.ரஜினிகாந்த்?

போராட்டங்கள் மூலமே விடுதலை முதற்கொண்டு ஜல்லிக்கட்டு வரை அனைத்தும் பெறப்பட்டுள்ளது! புரட்சிகரப் போராட்டங்கள் இல்லாமல் உலகத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. நெருக்கடி இல்லாமல் எதுவொன்றும் பிறக்காது. போராட்டங்களே கூடாது என்பது மிகவும் ஆபத்தானது.

உரிமைக்காகப் போராடுபவர்களும் போராட்டத்தில் உயிரைவிட்டவர்களும் பைத்தியக்காரர்கள் அல்ல. போராடுபவர்களுக்குத் துணைநிற்க முடியாவிட்டால் ஒதுங்கிநில்லுங்கள்! போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மிகத்தவறு!

பாஜக-வினர் மோடி, தமிழிசை, பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, முதல்வர், அதிமுக அமைச்சர்கள் போன்றோர் சொல்வதையே ரஜினியும் வழிமொழிகிறார். ரஜினியின் குரல் அதிகாரத்தின் குரல்; அடித்தட்டு மக்களின் குரல் அல்ல! இதைவிடப் பெரிய அநீதிகள் நடந்தால் தான் முதல்வரை பதிவி விலகக் கோருவாரா ரஜினி என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டங்களே கூடாது என்றால், போராட வேண்டிய தேவையே இல்லாத ஒரு நல்ல அரசும் ஆட்சியும் இருந்துவிட்டால் நாங்கள் எதற்காகப் போராடப்போகிறோம்..?
மக்கள் 100 நாட்களாக ஸ்டெர்லைட் மூடக்கோரி போராடிவருகிறார்கள்! இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்..? இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா?.

பிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களைச் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள், விசமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு!

சொந்தநாட்டு மக்களைப் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமானது. தூத்துக்குடிக்குள் மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை விதிக்கிறது.

– இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

முந்தைய செய்திகச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம்! – சீமான் வேதனை
அடுத்த செய்திஅறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுக்கும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை