ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.

27


நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரு நாடுகளிலுமே குடுமப சர்வாதிகார ஆட்சியின் கீழ் மக்கள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் சூழலோ அறிவிக்கப்படாத மிசா காலத்தைப் போன்று இருக்கிறது. கருணாநிதி குடும்பத்தின் அடக்குமுறையின் கீழ் மக்கள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது .இருபது லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வருகிற பொங்கள் கண்ணீர் பொங்கலாக இருக்குமோ என்று கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்.
இயற்கை அனர்த்தனத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களுக்கோ, உடமைகளுக்கோ உரிய இழப்பீடுகள் இன்றி விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வரலாறு காணாத‌ விலை உயர்வு  ஏழைகளை பட்டினியில் விளிம்பிற்குத் தள்ளி விட்டது. முற்றிலுமாக நிலை குலைந்து விட்ட ஒரு மக்கள் விரோத நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்ட மகுடம் போல  ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கிறது.விலைவாசி குறித்தோ, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள், மக்கள் குறித்தோ கவலைப்படாமல் இளைஞன் பட விழாக் கொண்டாட்டத்தில் குஷியாக இருந்த கருணாநிதி பல ஆயிரக்கணக்கான கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தினம் தோறும் சி,பி.ஐ சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் பதறிப் போகிறார். இந்த ரெய்டுகளுக்கு காரணமான டில்லி காங்கிரஸ்காரர்களை கண்டிக்க வக்கற்ற கருணாநிதி அவர்களைக் குஷிப்படுத்தவும்,மக்களின் கவனத்தில் இருந்து பிரச்சனையை திசை திருப்பவும் விடுதலைப்புலிகள் ஊடுருவி தன்னையும், பிரதமரையும் கொல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையை ஏவி அறிக்கை வெளியிடுகிறார். ஒட்டு மொத்தமாக தமிழக மக்களுக்கு திமுக மீதும் கருணாநிதி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் நோக்கில் ஈழத் தமிழர்களின் வாழ்வை பணையம் வைத்து காங்கிரசார் தன் மீது சுமத்திய களங்கத்தை போக்க‌, ஏலகிரியில் இருந்து எழுதிய திரைக்கதையை இப்பொழுது காவல்துறை மூலம் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த இவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்.விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல.இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.
அடுத்த செய்திபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.