முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடன் வாங்குவதே நாட்டின் வளர்ச்சி, அதற்கான வட்டி கட்டுவதே மக்களுக்கான…

0

கடன் வாங்குவதே நாட்டின் வளர்ச்சி, அதற்கான வட்டி கட்டுவதே மக்களுக்கான நலத்திட்டம் என்று ஆட்சியாளர்கள் கட்டமைப்பது நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பெருந்துரோகம்!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாது, நாட்டினை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளம்பர அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கையாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாது வழக்கம்போல தமிழ்நாட்டை முற்று முழுதாக புறக்கணிக்கும் மற்றுமொரு ஏமாற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடுமையான வரிகள் மூலம் நாட்டின் குடிமகனை வலுவற்றவனாக்கிவிட்டு, 'ஏழ்மையை ஒழிப்போம்' என்று நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையானது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அரசின் வருவாயில் கோடிக்கணக்கான ஏழை தனிமனிதர்களை கசக்கிப் பிழிந்து பெறப்பட்ட வரி வருவாய் பங்கு 21% என்று கூறும் பாஜக அரசு, பல்லாயிரம் கோடிகள் சலுகையின் மூலம் பல இலட்சம் கோடிகள் இலாபமீட்டும் பெருநிறுவனங்கள் தரும் வரிவருவாய் பங்கு வெறும் 18% மட்டும்தான் என்பதும், பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டபடி தனியார் மயமாக்குவோம் என்பதும், இந்த அரசும்-அதிகாரமும் பாமர மக்களுக்கானது அல்ல பெருமுதாலாளிக்கானது மட்டும்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மீள உருவாக்க முடியாத கனிம வளங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வரும் நிலையில், அதனை புறந்தள்ளி கனிம வளங்களை வெட்டி எடுத்துச் செல்ல கடற்கரையை ஒட்டி புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது நாட்டினை வளவேட்டையாட வழிவகுக்கும் பெருங்கொடுமையாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கும், போக்குவரத்திற்கும் தலா 6 இலட்சம் கோடிகள் (11%) அளவிற்கு நிதியை ஒதுக்கியுள்ள பாஜக அரசு, வேளாண்மைக்கு 2 விழுக்காடும், கல்வி, மருத்துவத்திற்கு் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, உயிர் காக்கும் வேளாண்மைக்கும், உடல் நலன் காக்கும் மருத்துவத்திற்கும், அறிவை வளர்க்கும் கல்விக்கும் எந்த அளவு குறைவான முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது. சமூக நலத்திட்டங்களுக்கு வெறும் 62 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. மக்களின் அடிப்படை தேவையான வேளாண்மை, கல்வி, மருத்துவத்தைவிட பெருமுதலாளிகளின் இலாப வேட்டையில் எவ்வித தேக்கமும் ஏற்பட்டுவிடாதபடி போக்குவரத்து சேவை செய்வதே பாஜக அரசிற்கு முதன்மையானதா?

நாட்டின் மொத்த வருவாயில் 24 விழுக்காட்டை கடனாக வாங்கியுள்ளதாக அறிவித்துவிட்டு, மொத்த கடனுக்கு வட்டியாக 20 விழுக்காடு செலவிடுவதாக தனது நிதிநிலை அறிக்கையில் கூறும் அரசு எப்படி நல்ல அரசாக இருக்க முடியும்? இந்திய ஒன்றிய அரசு மக்கள் திட்டங்களுக்காக செலவிடும் (17%) தொகையைவிடவும், வாங்கியுள்ள மொத்த கடனுக்கு செலுத்தும் (20%) வட்டி அதிகம். இதற்குப் பெயர்தான் வளர்ச்சியா? இதற்குப் பெயர்தான் நாட்டின் முன்னேற்றமா? அலைபேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கு
வரி குறைப்பு செய்துவிட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, குளம்பி தூள் (காப்பி பொடி) ஆகியவற்றின் மீதான வரியை அதிகரித்திருப்பது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

அதுமட்டுமின்றி, நடப்பு நிதிநிலை அறிக்கையில் வேளாண் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும் உர மானியத்தில் 16 ஆயிரம் கோடிகளும், உணவு மானியத்தில் 500 கோடிகளும், எரிபொருள் மானியத்தில் 3000 கோடிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியை 1000 கோடிகளும் பாஜக அரசு குறைத்துள்ளது ஏன்? மானியங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, 2026-27ஆம் ஆண்டிற்குள் 'மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதி பற்றாக்குறையை' 4.5%க்கும் கீழ் குறைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று பாஜக அரசு பெருமை பேசுவது வெட்கக்கேடானது. உற்பத்தியை பெருக்குவதன் மூலம் வருவாயை அதிகரித்தும், கடன் வாங்குவதை குறைத்தும், நிதிப்பற்றாக்குறையை போக்க வேண்டுமே தவிர, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார மானியத்தை குறைத்துவிட்டு நிதிப்பற்றாக்குறையே இல்லை என்று நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.

மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 50% நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, கடந்த ஆண்டைப்போல வெறும் 41% மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது மாநில உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்பான நிதிநிலை அறிக்கையில் அம்மாநிலத்திற்கு பல்லாயிரம் கோடிகளை சிறப்புத் திட்டங்களுக்காக கொட்டிக்கொடுத்த மோடி அரசு, இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் தமிழ்நாட்டிற்கு, தேர்தலுக்காகவாது எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காதது, என்ன செய்தாலும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை வாங்க முடியாது என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. அதிக வரிவருவாய் தரும் தமிழ்நாட்டை பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது தமிழர்களுக்கு செய்கின்ற பெருந்துரோகமாகும்.

ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், சிறுகுறு வணிகர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் முற்று முழுதாக புறக்கணித்துவிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நிதிநிலை அறிக்கை, தனியார் பெருமுதலாளிகளின் வளவேட்டைக்கு நாட்டை தாரைவார்க்க அரசே எழுதி தந்துள்ள அதிகார சாசனமாகும்.

மொத்தத்தில் ஏழ்மையை ஒழிக்கவும், வேளாண்மையை மீட்கவும்,
பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும், அதிக வரி விதித்து அமெரிக்க அரசு தரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாது, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை வாரி வழங்கியும், பாஜக ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை, தொலைநோக்குப் பார்வை ஏதும் இல்லாத, நாட்டினை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மற்றுமொரு வெற்று ஏமாற்று அறிக்கையாகும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version