நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி





