சமூக அவலங்களைப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் தம்பி சைமன் அவர்களைப் பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதா?
@CMOTamilnadu @mkstalin
திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சைமன் அவர்களைப் பொய்வழக்கின் கீழ் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 01-12-2024 அன்று ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி, மயிலாப்பூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் கனிமவளக்கொள்ளை குறித்துப் பேசியதற்காக அரசியல் பழிவாங்கல் நோக்கோடு, தம்பி சைமன் மீது பொய்யாக வழக்குத் தொடுத்து சிறைப்படுத்தியிருப்பது வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆத்தூர் தொகுதிக்குள் சட்டவிரோதமாக நடக்கும் மிதமிஞ்சிய மது விற்பனையையும், கட்டுக்கடங்காத கனிமவளக் கொள்ளையையும் தடுத்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய திராணியற்ற திமுக அரசு, அச்சமூக அவலங்களுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் பேசியதற்காக தம்பி சைமனைக் கைதுசெய்திருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். சிறைப்பட்டிருக்கும் தம்பி சைமனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி முழுமையாக துணைநிற்குமெனவும், அவரை விடுவிப்பதற்குரிய சட்டப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மேற்கொள்ளுமெனவும் இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன்.
அதிகாரத்திமிரிலும், பதவி மமதையிலும் எதேச்சதிக்காரப்போக்கோடு செயல்படும் மக்கள் விரோத திமுக அரசின் கொடுங்கோன்மைப் போக்குக்கும், அதிகார அத்துமீறல்களுக்கும் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
ஆகவே, தம்பி சைமன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென ஆளும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


