முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய…

0

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் புரட்சிகரமான மாற்று அரசியலை முழுமையாக ஏற்று, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகை ஐயா வில்சன் ஆவார். பொருளாதாரத் தன்னிறைவுக்காக அயலகத்துக்குச் சென்றபோதும் அங்குள்ள நாம் தமிழர் கட்சியின் உறவுகளோடு இணைந்து இனமானப் பணியாற்றினார்.
தாய்த்தமிழகத்துக்குத் திரும்பி தஞ்சை நடுவண் மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோதும், திறம்பட செயலாற்றினார். அளப்பெரும் இன உணர்வாளராக, ஆற்றல்மிகு செயல்வீரராக, மதிப்புமிகு களப்போராளியாக என நாம் தமிழர் கட்சியின் தன்னிகரில்லா தளபதியாக திகழ்ந்த ஐயா வில்சன் அவர்களது இழப்பு நாம் தமிழர் கட்சிக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். ஐயா வில்சன் அவர்கள் மறைந்தாலும் அவரது நோக்கங்களும், கனவுகளும் எப்போதும் உயிர்ப்போடுதான் இருக்கும். அவர் மறைந்திட்ட இந்நாளில் அவை யாவற்றையும் நிறைவேற்றிட உறுதியேற்கிறோம்.

ஐயா வில்சன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version