முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய்…

0

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 பரப்பலகு (Hectare) அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 பரப்பலகு அளவிலான நிலத்தினையும் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு அதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான குறுக்கம் (ஏக்கர்) அளவில் வேளாண் நிலங்களைப் பாதிப்பதோடு, சூழலியல் முதன்மைத்துவம் கொண்ட ஈரநிலங்களையும் அழித்துவிட்டு அமையவிருக்கும் பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையமானது பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் மக்களின் எண்ணங்களைப் புறந்தள்ளிவிட்டு ஒருமனதாக செயல்படுத்தப்படுவது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு நேரெதிர் செயலாகும். மக்களவைத் தேர்தல் நெடுகிலும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரானது போன்றும், விமர்சிப்பது போன்றும் பரப்புரை மேற்கொண்டு, வெற்றியும் பெற்றுள்ள திமுக அரசு தற்பொழுது அதே பாஜக கொண்டு வரக்கூடிய அழிவுத் திட்டத்தினை மக்களின் கடும் எதிர்ப்பின் நடுவிலும் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று முனைப்புக் காட்டுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யக்கூடிய துரோகமாகும்.

பாஜக கொண்டுவரக்கூடிய அழிவுத் திட்டங்களை ஆதரிப்பதை விட்டுவிட்டு, பாஜக எதிர்ப்பின் வழியே திமுகவிற்கு வெற்றியைத் தந்த மக்களின் பக்கம் நிற்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்களின் கடும் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள, சூழலியல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் இத்திட்டத்தினை முழுமையாக எதிர்ப்பதோடு, பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

@CMOTamilnadu @mkstalin

Exit mobile version