சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட, 7 பேர் மரணித்த துயர நிகழ்வறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் பன்மடங்கு அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கின்றது. 5 ஆண்டுகால திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், முறையாக பாராமரிக்கப்படாத அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாகப் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாவது ஏற்றுக்கொள்ள இயலாத பெருங்கொடுமையாகும்.
சாலை ஓரத்தில் சென்ற வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி நிகழ்த்திய விபத்து குறித்து தமிழ்நாடு அரசு உரிய நீதி விசாரணை நடத்துவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய துயர் துடைப்பு நிதியினையும் வழங்க வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்.




