முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17…

0

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் நிர்வாகி அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்கள் அன்னைத் தமிழ் காக்க தன் இன்னுயிரை இழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ? என்ற புரட்சி பாவலர் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உணர்ச்சிமிகு பாவரிகளுக்கு ஏற்ப தாய் மொழிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தலையை கொடுத்தேனும் அதனை தடுத்து நிறுத்துவதுதான் தமிழர் மரபு என்றபோதிலும், அத்தகைய ஈகத்தால் வரும் இழப்பினை ஏற்க மனம் மறுக்கிறது. வலிக்கிறது!

சகோதரர் சிவா திலீபன் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து இந்தியைத் திணிக்கும் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக இன்னும் வலுவான பற்பல வீரியப் போராட்டங்களை முன்னெடுத்து, அன்னைத்தமிழை அழியாது காக்கும் அரணாக களத்தில் நின்றிருக்க வேண்டும் என்கிற சிந்தனையே இத்துயர்மிகு சூழலில் உள்ளத்தில் எழுகிறது.

இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள்
இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதையே இனிவரும் தலைமுறையினருக்கும் அறிவுறுத்தலாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

அன்புச்சகோதரர் சிவா திலீபன்
அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மே 17 இயக்கத்தினருக்கும், தமிழ் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.

தாய்த்தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version