முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம் பெரும் பாட்டன் வீரத்தியாகி சி.சு.விஸ்வநாத தாஸ் பெரும்புகழ் போற்றுவோம்!…

0

நம் பெரும் பாட்டன்
வீரத்தியாகி
சி.சு.விஸ்வநாத தாஸ்
பெரும்புகழ் போற்றுவோம்!
மார்கழி 16 | 31-12-2025

தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினால் தானே பாடல் இயற்றி, இனிமையாகப் பாடி, அசாத்தியமாக நடிக்கும் ஆற்றலும் உடைய பல்திறன் படைத்த படைப்பாளி..!

மங்கிக்கிடந்த நாட்டு விடுதலை உணர்வை, தன் பாட்டின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் மண்ணின் மக்களுக்கு ஊட்டிய பெருங்கலைஞர்..!

தான் ஏற்றிருக்கும் கதை மாந்தரின் முழு வடிவமாகவே மாறி அவ்வேடத்தில் கரைந்து நடிக்கும் ஆற்றல் பெற்ற சிறப்புக்குரியவர் நம் பெரும் பாட்டன் சி.சு.விஸ்வநாத தாஸ் அவர்கள்.

பாட்டன் விஸ்வநாததாஸ் அவர்களின் நாடகம் நடக்கிறது என்றாலே அங்கே தன்மான உணர்வு பெற்று மக்கள் எழுச்சிக் கொள்கிறார்கள் என்று அறிந்துக்கொண்ட ஆங்கிலேய அரசு காவலர்கள் மூலம் பாட்டனாரைச் சிறைபிடிப்பது, பிறகு விடுதலை செய்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தது.

அத்தகைய கடுஞ்சூழலில் தொடர்ச்சியாக நமது பாட்டனார் அவர்கள் சிறைப்பட்டதால் தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று, அவர் பரம்பரையாக வாழ்ந்த வீடும் ஏலத்திற்கு வந்த நெருக்கடி நிலை உருவானது.

அன்றைய மாநகரத் தந்தையாக இருந்த வாசுதேவ் அவர்கள், “நீங்கள் துன்பப்படக் கூடாது, இந்த வீட்டிற்கு என்ன தொகை வருமோ அதை நானே கட்டி உங்கள் வீட்டை மீட்டுத் தருகிறேன். அதனை நீங்களே பயன்படுத்துங்கள்” என்று கூறியபோது, “என்னால் புல்லை உண்ண முடியாது” என்று தன்மானத்தோடு மறுத்த தீரர் நம்முடைய பாட்டன் விஸ்வநாததாஸ் அவர்கள்.

மக்களின் உடற்பிணி தீர்த்து உயிர்காக்கும் உன்னத மருத்துவக்குடியினர் பின்னாட்களில் தாழ்ந்த குலம் என இழிவுபடுத்தப்பட்டனர். அதனால், நாவிதக் குலத்தில் பிறந்த விஸ்வநாததாசுடன் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று அவருடைய சக நடிகர் நடிகைகள் பலர் மறுத்தது நம் பாட்டனாருக்கு மிகுந்த வலியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியது.

இந்த மண்ணில் பிறந்த மகனாக, இந்த நாட்டின் உரிமைக்கு, அதன் விடுதலைக்குப் போராடுகிற ஒரு மனிதனைத் தாழ்த்தப்பட்டவன் என்று ஒதுக்கும் கொடியவர்களும் வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்தவர்கள்தான். அத்தகு நெருக்கடி நிலையை எதிர்கொண்ட நம்முடைய பாட்டனார், தனது நாடகத்தில் “தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ?, மண்ணில் ஏங்குவோர் உண்டோ?” என்றெல்லாம் வருந்திப்பாடி தன்னுடைய மனக்காயத்தினைக் கொண்டே தமிழர் இனக்காயத்திற்கும் மருத்துவம் செய்தார்.

தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்த நம்முடைய பாட்டனார் உடல் நலிவுற்ற நிலையில், இறுதியாக நம்மின முன்னோன் முப்பாட்டன் முருகன் வேடமிட்டு நடித்தபோது, மேடையில் முருகன் வேடத்திலேயே தம்முடைய இன்னுயிரை இழந்தார்.

இம்மண்ணின் விடுதலைக்கு அளப்பரிய ஈகத்தைச் செய்த நமது பாட்டனார் விஸ்வநாததாஸ் போன்றவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கு அரை நூற்றாண்டிற்கும் மேலாக இந்த மண்ணை ஆண்ட திராவிடக் கட்சிகள், ஆட்சி – அதிகாரத்தில் கடைபிடிக்கும் அரசியல் தீண்டாமையே முதன்மையானக் காரணமாகும்.

கேடுகெட்ட அவ்வதிகாரத்தைத் துடைத்தெறிந்து, தமிழர் அதிகாரத்தை நிறுவி நம்முடைய பாட்டனார் விஸ்வநாததாஸ் அவர்களைப் போன்ற பெருமைமிகு நம் இன முன்னோர்களை, வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியக் கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு மானத்தமிழ் மகனுக்கும் இருக்கிறது.

அடிமைப்பட்ட நம் தாயக விடுதலைக்கு அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி, தமிழினத்தின் பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி சி.சு.விஸ்வநாத தாஸ் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version