முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

படையாண்ட மாவீரா – வீரமும், ஈரமும் கொண்ட ஒரு மாவீரனின்…

0

படையாண்ட மாவீரா – வீரமும், ஈரமும் கொண்ட ஒரு மாவீரனின் வரலாறு!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வன்னியர் சங்க தலைவர், பெருமதிப்பிற்குரிய அண்ணன்
காடுவெட்டி குரு அவர்களின் போர்க்குணமிக்க போராட்ட வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு பேரன்புமிக்க தம்பி வ.கௌதமன் எழுதி இயக்கி நடித்துள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்டு ரசித்தேன்.

வாழ்க்கை வரலாற்றை, அதிலும் அரசியல் சார்ந்த போராட்ட வாழ்வை திரைப்படமாக காட்சிப்படுத்துவது அத்தனை எளிதானது அல்ல; உண்மைக்கு புறம்பானதாக முற்றிலும் அந்நியப்படாமலும், அதே நேரத்தில் ரசிகர்களுக்கு சலிப்பூட்டாமலும் கவனமாக கையாள வேண்டும். தம்பி கௌதமன் ஏற்கனவே வனக்காவலர் வீரப்பனார் அவர்களின் வரலாற்றை சந்தனக்காடு தொடராக படைத்தளித்த அனுபவத்தினால், குறையேதுமின்றி, காட்சிகள் ஒவ்வொன்றையும் விறுவிறுப்பாக அமைத்து கண்களுக்கு விருந்து கலை விருந்து படைத்துள்ளார்.

இளம் வயது நாயகனாக வரும் அன்புமகன் தமிழ் கௌதமன் தந்தையை மிஞ்சும் தனயனாக அசாத்திய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்துள்ளார். நாயகனின் தந்தையாக வரும் தம்பி சமுத்திரக்கனி சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் தம்முடைய காத்திரமான பாத்திரத்தாலும், 'சாதி மதம் கடந்து இந்த இனத்தை ஒன்றிணைக்க நிச்சயம் ஒருத்தன் வருவான்' போன்ற அழுத்தமான உரையாடல்களாலும் நெஞ்சில் நிற்கிறார்.

படத்தின் நாயகி பூஜிதா சிறப்பான நடிப்பினால் முத்திரை பதித்துள்ளார். படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ள அண்ணன் இளவரசு, அண்ணன் மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளனர்.

அன்புத்தம்பி பாலமுரளிவர்மனின் உணர்வுப்பூர்வமான அழுத்தமான உரையாடல்கள் படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது.

முத்தமிழ் பேரறிஞர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் காலத்திற்கும், களத்திற்கும் ஏற்ற பொருள் பொதிந்த பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது அன்புத்தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களின் இசை மனதை மயங்கச்செய்கிறது. சாம் சி எஸ் அவர்களின்
பின்னணி இசையும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

அதைப்போன்று ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சிகளும், தினேஷ் மற்றும் கணேஷ் அவர்களின் நடனமும் படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது.
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவரும் காட்சிகள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக
காட்சிப்படுத்தியுள்ளனர்.

தான் பிறந்த மண்ணிற்காக போராடும் வீரமும்,
மக்களின் நல்வாழ்விற்காகவும் சமரசமற்று நிற்கின்ற ஈரமும் கொண்ட ஒரு மனிதரின் மறைக்கப்பட்ட மறுப்பக்கத்தை தம் கலைத்திறனால் அனைவரும் அறிய வெளிப்படுத்தியதுதான் படையாண்ட மாவீரா என்ற இம்மகத்தான படைப்பின் மாபெரும் வெற்றியாகும். எத்தகைய சூழ்நிலையிலும் பணத்திற்கு விலைபோகாது தான் பிறந்த இனத்திற்காக இறுதிவரை களத்தில் நின்ற போராளியின் போராட்ட வாழ்வே படையாண்ட மாவீரா திரைப்படைப்பாகும்.

இத்திரைப்படத்தில் பங்காற்றிய
நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், பாராட்டுகளும்!

படையாண்ட மாவீரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

Exit mobile version